என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், பிப்ரவரி 21, 2013

10 காவிரி தந்த கலைச்செல்வியா ஜெயலலிதா?.....


1981-ஆம் ஆண்டு மதுரையில் ஐந்தாம் உலக தமிழ் மாநாடு நடத்த விரும்பினார் அப்போதைய முதல்வர் எம் ஜி.ஆர்.,  அந்த பொறுப்பை அப்போதைய செய்தி விளம்பரத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனிடம் ஒப்படைத்தார். அப்படி நடக்கும் மாநாட்டில் ஜெயலலிதாவின் நாட்டிய நடனமும் இடம் பெற்றால் நன்றாக இருக்கும் என்று நினைத்த ஆர்.எம்.வீ., நதியை தேடிவந்த கடல் படத்தோடு தன் சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஒதுங்கியிருந்த ஜெயலலிதாவை அழைத்துவந்தார். அப்படி ஜெயலலிதா வந்து நடித்துக்கொடுத்த நாட்டிய நாடகம்தான் காவிரி தந்த கலைச்செல்வி.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசு தன் கெசெட்டில் வெளியிட ஜெயலலிதா கொடுத்த அழுத்தத்தின் மூலம், 33 வருடங்களுக்கு பின் ஜெயலலிதா நடத்திய நாடகத்தின் பேரே இப்போது ஜெயலலிதாவிற்கும் வந்திருக்கிறது. நேற்று காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசிதழில் அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு வெளியிட்டு காவிரி டெல்டா பகுதி விவசாயிகளிலன் வயிற்றில் பாலையும் வயலில் நீரையும் பாய்ச்சியுள்ளது. காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் இது கருதப்படுகிறது.

நீண்ட காலமாக இந்த காவிரி பிரச்சினை இழுபறியாக இருந்துவந்தாலும், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது அப்போதைய வி.பி.சிங் அரசினால்தான். அதற்கு அழுத்தம் கொடுத்தது அப்போது தமிழகத்தில் ஆட்சியிலிருந்த தி.மு.க.,அரசுதான் என்பதையும் மறுக்க முடியாது. சரி அரசிதழில் இத்தீர்ப்பை வெளியிட்டால் என்ன நன்மை என்று பிரபல பத்திரிகையாளர் மாலன் தன் முகப்புத்தகத்தில் எழுதியிருந்ததை அப்படியே தருகிறேன்......


அரசிதழில் வெளியானதால் என்ன நன்மை?

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி என்.பி. சிங்கைத் தலைவராகவும் சுதீர் நாராயண், என்.எஸ்.ராவ் ஆகியோரை உறுப்பினராகவும் கொண்ட இந்த நடுவர் மன்றத்தின் ஆணை அரசிதழில் வெளியிடப்பட்ட 90 நாள்களுக்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இது நடைமுறைக்கு வந்தவுடன்-

கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, கபினி, ஹேரங்கி ஆகிய நான்கு அணைக்கட்டுகளும் கர்நாடக அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடும். அதாவது எங்களுக்குப் போதுமான அளவு தண்ணீர் கிடைத்த பின்னர்தான் தமிழகத்திற்குத் தண்ணீர் தருவோம் என்றோ, ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தரமாட்டோம் என்றோ கர்நாடகம் சொல்ல இயலாது

இப்போதுள்ள காவிரி நடுவர் மன்றம், காவிரி நதி நீர் ஆணையம் ஆகியவை கலைக்கப்பட்டுவிடும்

அதற்கு பதில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீரை நெறிப்படுத்தும் குழு என்ற அமைப்புக்கள் உருவாக்கப்படும். இவற்றில் தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள். இந்த இரண்டு அமைப்புக்களும் மத்திய நீர் கமிஷனின் நேரடி மேற்பார்வையில் செயல்படும்.

இதற்காக நாடளுமன்றத்தில் தனியாக ஒரு சட்டம் இயற்றப்படவேண்டுமா எனத் தெரியவில்லை

தமிழகத்திற்கு 419 டி.எம்.சி, கர்நாடகத்திற்கு 270 டி.எம்.சி, கேரளத்திற்கு 30 டி.எம்.சி, புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி எனக் காவிரித் தண்ணீரைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என் ஆணை சொல்கிறது. வறட்சிக் காலத்தில் இதே விகிதாச்சாரத்தில் இருக்கும் நீர் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.
அது மட்டுமல்ல, மாதம் தோறும் எவ்வளவு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது.

இந்த ஆணை முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், வேளாண்மைப் பணிகளைத் திட்டமிட்டு செய்ய முடியும்.


1. உச்ச நீதி மன்றத் தீர்ப்பையே மதிக்காத கர்நாடகம் இதை எப்படி நடைமுறைப்படுத்தும்?

நான் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தபடி அரசிதழில் நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியிடப்பட்டதையடுத்து, கர்நாடகம் நான்கு அணைகள் மீது அதற்குள்ள அதிகாரத்தை இழக்கிறது. எனவே அந்த அணைகளைத் திறக்கவோ மூடவோ அது உத்தரவிட முடியாது. தண்ணீர் திறந்துவிடும் அதிகாரமும் பொறுப்பும் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஓர் அமைப்பின் கீழ் வந்துவிடும். எனவே இந்தக் கேள்விக்கே இடமில்லை

2.இந்த ஆணையை நாடாளுமன்றம் மாற்றி அமைக்க முடியுமா?

நடுவர் மன்றத் தீர்ப்பு என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நிகரானது.உச்ச நீதி மன்றத் தீர்ப்பில் மாற்றங்கள் செய்ய நாடாளுமன்றத்திற்கு அதிகாரமில்லை

3.காவிரி கண்காணிப்புக் குழுவின் தலைவர் என்ற முறையில் பிரதமர் மாற்றம் செய்ய முடியுமா?

தீர்ப்பு அரசிதழில் வெளியான உடனேயே அந்த அமைப்பு செல்லாததாகி விட்டது. எனவே அதன் தலைவரும் அதிகாரமிழக்கிறார்

4.இந்தத் தீர்ப்பு எப்படி நடைமுறைப்படுத்தப்படும்?

இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஓர் அமைப்பை மத்திய அரடு உருவாக்க வேண்டும். அதைக் குறித்தும் அந்தத் தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த அமைப்பு இல்லாமல் இந்தத் தீர்ப்பு வெறும் காகிதம் எனத் தீர்ப்பே சொல்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்க வேண்டும். அது மத்திய நீர் வளக் கமிஷனின் கீழ் இயங்கும். அதில் நான்கு மாநில பிரதிநிதிகளும் இருப்பர்.
இந்த அமைப்பை உடனடியாக உருவாக்க தமிழக அரசு வற்புறுத்தி வருவதாகத் தெரிகிறது. ஆனால் கர்நாடகம் உச்ச நீதி மன்றத்தில் உள்ள காவிரி தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வரும் வரை இதை அமைக்கக் கூடாது எனச் சொல்லி வருகிறது. மத்திய அரசு சட்ட அமைச்சகத்திடம் கருத்துக் கேட்டுள்ளது. ஆனால் இந்த அமைப்பைப் பற்றி, நடுவர் மன்றத் தீர்ப்பே குறிப்பிட்டிருப்பதாலும், அது அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டதான் காரணமாக அதிகாரபூர்வமாகிவிட்டதாலும் மாற்றுக் கருத்துக்கள் சொல்ல இடமில்லை. ஆனால் இந்த அமைப்பு ஏற்படுத்துவதை மத்திய அரசு கிடப்பில் போடலாம். (கர்நாடகத்தில் மே மாதம் சட்ட மன்றத் தேர்தல். அங்கு காங்கிரஸ் முக்கிய கட்சி) ஜெ. நீதிமன்றத்தை நாடலாம். இவ்வளவு தூரம் போராடியவர் இதை விட்டுவிட மாட்டார் என நம்பலாம்

5.இதைப் போன்று வேறு எங்காவது சுயேட்சையான மேலாண்மை வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளதா?

இந்தியாவிலேயே பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் உள்ளது


நன்றி மாலன்



Post Comment

இதையும் படிக்கலாமே:


10 கருத்துகள்:

  1. அரசிதழ் பற்றியும் அதன் பயன்களையும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! எப்படியோ தமிழக விவசாயிகளுக்கு நல்லதுநடந்தால் நல்லதுதான்!

    பதிலளிநீக்கு
  2. அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (22.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 22.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

    பதிலளிநீக்கு
  3. காவிரி தந்த கலைச் செல்வி,தமிழக முதல்வர் டாக்டர் அம்மா வாழ்க!
    வெற்றிக் கொடி கட்டுங்கள்!

    பதிலளிநீக்கு
  4. ஐயா தங்களது கருத்துக்களில் அரசியல் அதிகமாக இருக்கிறது.இரண்டாவது தாங்கள் தலைவராகக் கருதுபவரே இப்படித்தான் எழுதுவார்,பேசுவார்.ஆதலால் தங்களை குறை சொல்வதில் அரத்தமில்லை.
    எல்லாவற்றிலும் எதிர் மறை குணங்களை தேடிபிடித்து குறை காண்பது அரசியல் வாதிகளுக்கு வேண்டுமானால் வாடிக்கையாக இருக்கலாம்.ஆனால் நமக்கு?
    இதற்கு மேல் எழுத தங்களது பதிவிலேயே விசயம் இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் எழுதி தங்களை போல அரசியல் செய்ய நான் விரும்பவில்லை.இது தங்களது பதிவு என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.அதை ஏன் எழுதினாய்,இதை ஏன் எழுதவில்லை என்றெல்லாம் கேட்க கூடாது.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சம்பந்தமில்லாத கமெண்டாக இருக்கே.கொஞ்சம் தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும் சார்.

      நீக்கு
  5. காவிரி ந. ம. இ. தீர்ப்பு முழு விவரங்கள் தந்த பதிவு.
    1981 உ.த.மா. பற்றிய செய்தி, சுவையானது.

    பதிலளிநீக்கு
  6. காவிரி ந. ம. இ. தீர்ப்பு முழு விவரங்கள் தந்த பதிவு.
    1981 உ.த.மா. பற்றிய செய்தி, சுவையானது.

    பதிலளிநீக்கு
  7. கெஜட்டில் வெளியிடுவதால் என்ன நன்மை விளைந்து விடப்போகிறது என்றுதான் நினைத்தேன். மாலனின் கட்டுரை பல விஷயங்களை புரிய வைத்தது.
    தி,மு.க இதுபோன்ற முயற்சிகளை தங்கள் ஆட்சியில் எடுத்திருக்கவேண்டும்.காங்கிரசுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்தால் நிச்சயம் கெஜட்டில் வெளியாகி இருக்குமா என்பது சந்தேகமே!
    ஆனாலும் கர்நாடக அரசியல்வாதிகள் மக்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்துவார்கள்
    எப்படி இருப்பினும் தமிழக விவசாயிகளுக்கு நல்லது நடக்கவேண்டும்.
    நல்ல பகிர்வு ரஹீம்.

    பதிலளிநீக்கு
  8. உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  9. நல்ல தெளிவான விளக்கம் கிடைத்தது. நன்றி கசாலி சார்..

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.