என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், மே 09, 2013

2 ஆளுங்கட்சிக்கு சிம்மசொப்பனமான எதிர்கட்சி தலைவர்



இந்தியாவில் நடப்பதுபோல் தேர்தல் என்பது திருவிழா அல்ல மலேசியாவில். அது ஒரு நிகழ்வு. பாராளுமன்றம் கலைக்கப்பட்ட உடனே தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடத்தப்படும். இத்தனையும் ஒரு மாத காலத்தில் நடந்துவிடும். வாக்குப்பதிவு நடந்த அன்றே வாக்குகளும் எண்ணப்பட்டு சுடச்சுட முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும்



கடந்த வாரம் மலேசியாவில் நடந்த 13-வது பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியான பாரிசான் நேஷனல் 133 இடங்களையும், எதிர்கட்சி கூட்டணியான பி.ஆர்., 89 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. கடந்த 2008 தேர்தலோடு ஒப்பிடுகையில் ஆளும் கட்சிக்கு 7 இடங்கள் குறைந்து, எதிர்கட்சிக்கு 7 இடங்கள் அதிகரித்துள்ளது. ஆனால், மகாதீர் முகம்மது பிரதமராக இருந்தவரை எதிர்கட்சிகள் என்பதே இல்லை என்னும் அளவுக்குத்தான் இருந்தது. அந்த அளவுக்கு கட்சியையும் நாட்டையும் தன் இரும்புப்பிடிக்குள் வைத்திருந்தார். மகாதீர் கடைசியாக 2004 பொதுத்தேர்தலை சந்தித்தபோது, ஆளும் கட்சி சுமார் 200 இடங்களையும் எதிர்கட்சிகள் வெறும் 21 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. அந்த தேர்தலில் மட்டுமல்ல அதற்கு முந்தைய தேர்தல்களிலும் எதிர்கட்சிகளின் நிலை அப்படித்தான் இருந்தது. ஆனால், 2008- தேர்தலுக்கு பின்தான் எதிர்கட்சிகளுக்கு ஏறுமுகம். அதற்கு காரணம தற்போதைய எதிர்கட்சி தலைவரான் அன்வர் இப்ராஹிம்.   யார் அந்த அன்வர் இப்ராஹிம் ஒரு ப்ளாஷ் பேக்......




அன்வார் இப்ராஹிம் விரும்பி எதிர்கட்சி தலைவரானவரல்ல. அவர் ஆளுங்கட்சியில் அரசியல் பயின்றவர்தான். மகாதீர் முகம்மது பிரதமாராக இருந்தபோது நிதியமைச்சராகவும், துணைப்பிரதமராகவும் இருந்தவர். மகாதீருக்கும், அன்வருக்கும் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக அவரிடமிருந்த துணை பிரதமர் பதவியை பறித்த மகாதீர் ஊழல்குற்றச்சாட்டு சுமத்தி சிறையில் அடைத்தார். அந்த வழக்கில் அ(ன்)வருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின் ஓரினச்சேர்க்கை வழக்கு போடப்பட்டு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

வான் அஸிசா


அந்த நேரத்தில்தான் அன்வரின் வழிகாட்டுதல் படி அவர் மனைவி வான் அஸிசா கா அடிலான் எனப்படும் மக்கள் நீதிக்கட்சியை துவங்கினார். அதன் பின் நடந்த பொதுத்தேர்தலில் அதுவரை தன் கணவர் இருந்த கட்சியான அம்னோவை எதிர்த்து களம் இறங்கி எம்.பி.யாக ஜெயித்தார். அன்வர் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார் அன்வர். அதன் பின் அரசியல் களம் சூடு பிடித்தது. அடுத்ததாக எதிர்கட்சிகளை ஒன்றினைத்து மக்கள் கூட்டணியை உருவாக்கினார் அன்வர். 2008- தேர்தலில் அன்வர் போட்டியிடா விட்டாலும் தன் மனைவியையும், தன் மகள் நூருல் இஷாவையும் களத்தில் இறக்கினார்.அன்வரின் கூட்டணிக்கு 82 தொகுதிகள் கிடைத்தது. ஐந்து மாநிலங்களை இந்த கூட்டணி கைப்பற்றியது. இது ஆளும்கட்சிக்கு பெரும் அடியாக இருந்தது. இதுவரை யாரும் இப்படி ஜெயித்ததில்லை.

நூருல் இஷா அன்வர்


மீண்டும் அன்வர் மீது பழிவாங்கும் படலம் ஆரம்பமானது.இந்தமுறை  அன்வரிடம் உதவியாளராக இருந்தவரை வைத்தே ஓரினச்சேர்க்கை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது அவர் மீது. இருந்தாலும் எம்.பி.யாக இருந்த தன் மனைவியை ராஜினாமா செய்ய சொல்லி அங்கு நடந்த இடைத்தேர்தலில் தான் போட்டியிட்டு வென்று எதிர்கட்சி தலைவரானார் அன்வர். தன் மீது போடப்பட்ட வழக்கிலிருந்து கடந்த ஆண்டுதான் முற்றிலும் வெளியே வந்தார். ஓகே பிளாஷ் பேக் ஓவர்.


இப்போது நடந்த தேர்தலில் அன்வரின் கூட்டணியே வெற்றி பெறும் என்ற நிலையே இருந்ததாக சொன்னார்கள் அரசியல் நோக்கர்கள். ஆனால் கள்ள ஓட்டும், கடுமையான பணமும் விளையாடிதால் ஆளும்கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அன்வர் குற்றம் சுமத்தியுள்ளார். அதில் ஓரளவு உண்மையும் உள்ளது. எங்கள் ஊரைச்சேர்ந்த பலர், மலேசியா குடியுரிமை பெற்றவர்கள். அதில் ஒரு பையனின் அடையாள அட்டையை பயன்படுத்தி ஒரு பங்களாதேஷ் பிரஜை ஒருவன் வாக்களித்து விட்டு போய்விட்டானாம். பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த நிறைய பேரை கள்ள ஓட்டு போடுவதற்காகவே ஆளுங்கட்சி இறக்குமதி செய்திருப்பதாக அன்வர் தேர்தலுக்கு முன்பே குற்றம் சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைப்போல் எங்கள் ஊரைச்சேர்ந்த நண்பர் ஒருவரின் கடையில் வேலை செய்யும் ஒருவருக்கு வாக்களிப்பதற்காக மலேசிய ரிங்கிட் 1200 கொடுத்ததாக கேள்விப்ப்ட்டேன். இது எனக்கு தெரிந்தது.


பேசாமல் மகாதீர் அன்வரையே துணைப்பிரதமராக தொடர விட்டிருந்தால், இந்நேரம், அன்வர் பிரதமராக இருந்துவிட்டு ஓய்வு பெற்றிருப்பார். ஆனால், தேவையில்லாமல் அவரை சீண்டியதால் இப்போது 89 இடங்களை அன்வரின் கூட்டணியிடம் இழந்துவிட்டு கடுமையான சவாலை எதிர்நோக்கியுள்ளது ஆளுங்கட்சி.

பின் குறிப்பு: மலேசியாவில் நான் இருந்தபோது இரண்டு பொதுத்தேர்தலை பார்த்தவன். என் நினைவில் உள்ளதை தொகுத்திருக்கிறேன். ஏதேனும் தவறிருந்தால் சொல்லுங்கள் திருத்திவிடுகிறேன்.



Post Comment

இதையும் படிக்கலாமே:


2 கருத்துகள்:

  1. நானும் முந்தைய தேர்தல் அப்ப அங்க இருந்தேன் மலேசியாவும் நம்ம இந்தியா மாதிரி மாறிகிட்டு இருக்கு குட்டிசெவர் ஆகம இருந்தா சரி தான்

    பதிலளிநீக்கு
  2. போகிற போக்கைப் பார்த்தால்,(இலங்கை மாதிரி)ஒரு வழி பண்ணாம விட மாட்டாங்க,போல?///அதாங்க,ஜனநாயகத்த குழி தோண்டி.............

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.