என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், ஏப்ரல் 09, 2015

3 நாகூர் ஈ.எம்.ஹனிபா என்னும் சகாப்தம்



நாகூர் ஹனிபா அவர்களின் பாடல்கள் அடங்கிய கேசட்கள் இல்லாத இஸ்லாமிய வீடுகளே இல்லை எனும் அளவுக்கு அவர் கொடி பறந்தது. இன்றும் தமிழ் இஸ்லாமிய திருமண வீடியோ பதிவுகள் இவர் பாடலோடுதான் ஆரம்பிக்கும். இஸ்லாமிய திருமண வீடுகளில் இவர் பாடல்கள்தான் ஆக்கிரமிக்கும். எங்கள் ஊருக்கு சில முறை வந்திருந்தாலும் இறுதியாக வந்து கச்சேரி செய்தது என் நண்பன் பர்வீஸ் Farwez Sha திருமணத்தில்தான். அப்போது எங்களுக்கு பிடித்த பாடலான 'பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை' என்ற பாடலை ஒன்ஸ்மோர் கேட்டோம். காரணம் அந்த பாடலில் இறுதியில் வரும் பாங்கு எனப்படும் தொழுகைக்கான அழைப்பை அவரின் கணீர் குரலில் கேட்க.
அப்போதெல்லாம் ஹனீபா அவர்கள் பாடினாலே அது இஸ்லாமிய பாடலாகத்தான் இருக்கும் என்றும் நம்பியிருக்கேன். இஸ்லாமிய பாடல்களை தவிர்த்து
'சின்னஞ்சிறு எழு நாடு சிந்தனையில் உயர் நாடு' என்ற ஒரு பாடல் சிங்கப்பூரின் மேன்மையை விளக்கும் பாடல். அதை ஹனீபா பாடியதாலேயே இஸ்லாமிய பாடல்போல எல்லா இடங்களிலும் ஒலித்தது.
அதேபோல திமுக.விற்காக எத்தனையோ பாடல் பாடியிருந்தாலும் 'பாளையங்கோட்டை சிறையினிலே' பாடலும், 'உதயசூரியன் சின்னத்திலே ஓட்டுப்போடுங்க மொத்தத்திலே அய்யாவை கேட்டேன், அம்மாவை கேட்டேன் அன்போடு கேட்டேன் பண்போடு கேட்டேன்' போன்ற பாடல்கள் என் மனதில் ஒட்டிக்கொண்டதற்கு காரணமும் அந்த வெங்கல குரல்தான்.
கலைஞர் பேசி கட்சியை வளர்த்தாரென்றால் ஹனீபா பாடி கட்சியை வளர்த்தவர். ஆனால் அரசியலில் பெரிதாய் சோபிக்காமல் போய்விட்டார். ஒரு முறை எம்.எல்.சி.யாக இருந்தவர் இன்னொருமுறை எம்.எல்.ஏ.விற்காக வாணியம்பாடி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். அத்தோடு அரசியல் ஆசைகளுக்கு மூட்டை கட்டி கட்டி வைத்துவிட்டார்.
சினிமாவில் கூட இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் இவரது குழுவில் வாத்தியம் இசைத்தவர்கள்தான் என்று சொல்பவர்களும் உண்டு.
இப்படி இஸ்லாமிய பாடல்கள், அரசியல், சினிமா என்று அனைத்திலும் பங்களிப்பை காட்டியவர். மதம் கடந்து தன் குரலுக்காவே அனைவரையும் நேசிக்க வைத்தவர் நாகூர் ஈ.எம்.ஹனிபா அவர்கள். இஸ்லாமிய பாடலாகட்டும், சினிமா பாடலாகட்டும், திமுக. கொள்கை விளக்க பாடலாகட்டும் இப்படி எந்தப்பாடலாகட்டும் தன் கணீர் வெங்கலக்குரலால் அனைவரையும் ஈர்த்தவர் நாகூர் ஹனீபா அவர்கள். 
இப்போது காற்றில் கலந்தது அவர் உயிர்தானே தவிர, குரல் அல்ல. அது எங்காவது ஒரு மூலையில் எப்போதும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


3 கருத்துகள்:

  1. நல்ல குரல் வளம் கொண்ட அருமையான பாடகர். சில குரல்களுக்கு என்றுமே அழிவில்லையே நண்பரே.

    பதிலளிநீக்கு
  2. 2007-ல் என நினைக்கிறேன்.
    இங்கு பேங்காக்கில் சிறப்பு அழைப்பாக வந்து கச்சேரி செய்து சென்றார்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.