என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், ஜனவரி 06, 2016

2 நாஞ்சில் சம்பத்தும் வைகோவும் பின்னே நானும்....









  (நாஞ்சில் சம்பத்தின் சமீபத்திய சர்ச்சைக்குரிய பேட்டியை பார்த்தபோது தோன்றியது இது. அன்றே எழுத நினைத்தேன். ஆனால் முடியவில்லை. இப்போது எழுதுகிறேன்).
நாஞ்சில் சம்பத். எனக்கு தெரிந்து அற்புதமாக பேசக்கூடிய பேச்சாளர்களில் முக்கியமானவர் இவர். ம.தி.மு.க.வில் இருந்தபோது மடைதிறந்த வெள்ளமாய் பேசுவார். நடை, உடை, பாவனைகளில் மட்டுமலாமல் பேச்சிலும் வைகோவை இமிடேட் செய்தவர். அவர் மதிமுக.வில் இருந்தவரை வைகோவின் மனசாட்சி என்றே சொல்லலாம் இவரை. தன் எண்ணங்களை இவரை விட்டு சொல்ல வைத்தே ஆழம் பார்ப்பார் வைகோ.
2006- ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இருந்தபோது தொகுதி பங்கீட்டில் ஓரிரு தொகுதிகளுக்காக பிரச்சினை வந்தபோது அதை பட்டென்று பொதுவெளியில் போட்டு உடைத்தவர் நாஞ்சில் சம்பத்.
"நாங்கள் ஓ பாசிட்டிவ் ரத்தம் போன்றவர்கள். யாரோடு வேண்டுமானாலும் எங்களால் சேர முடியும்" என்று கூறியதன் மூலம் எங்களால் அண்ணா.தி.மு.க.கூட்டணிக்கும் போக முடியும் என்று பகிரங்கமாக திமுக.வை மிரட்டியவர். இவர் பேச்சை கண்டிக்காமல் வைகோ அமைதியாக இருந்து ஆமோதித்தபோதே தெரிந்துவிட்டது இந்த புரட்சிப்புயல் போயஸ் கார்டனில்தான் கரையை கடக்குமென. எதிர்பார்த்ததுபோல் சில நாட்களிலேயே அண்ணா.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார்கள் இவர்கள்.
ம.தி.மு.க.வில் இருந்தவரை அவரால் சிங்கமென கர்ஜிக்கவும், புலியென உறுமவும் முடிந்தது. ஆனால் அண்ணா.தி.மு.க.விற்கு போனபின் அந்த அற்புதமான பேச்சாற்றல் சற்று குறைந்துதான் போனது. பேச்சில் லேசாக தொய்வு விழுந்தது அதற்கு பின்தான். அதற்கு காரணம் தனது எச்சரிக்கை உணர்வாகக்கூட இருக்கலாம். மதிமுக.வில் சுதந்திரமாக தன் இஷ்டத்திற்கு பேசிய பேச்சை அண்ணா.தி.மு.க.வில் இருந்துகொண்டு அவரால் பேச முடியவில்லை என்று எனக்கு விளங்கியது. எல்லாவற்றையும் அண்ணா.தி.மு.க.வின் லேட்டஸ் வெர்சனான 'அம்மாவின் ஆணைக்கணங்க'வை துணைக்கு அழைத்துக்கொண்டுதான் பேசினார்.
பேச்சாளர்களுக்கு தடையாக ஏதும் இருக்க கூடாது. நாகரீக எல்லைக்கு உட்பட்டு எப்படி வேண்டுமானாலும் சுதந்திரமாக பேசலாம். அவர்களின் பேச்சுக்கு வானம் மட்டுமே எல்லையாக இருக்கவேண்டும். அப்போதுதான் தான் நினைத்தவற்றை சொல்ல முடியும். இப்போது புதிய
தலைமுறையிலும், தந்தி.டிவியிலும் உளறி கொட்டியதால் அவரின் பேச்சாற்றல் குறைந்ததாக எடுத்துக்கொள்ள முடியாது. இருக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் சுயத்தை இழந்து தன்னை மாற்றிக்கொண்டதால் வந்த வினை இது.
சுதந்திரமாக திரிந்த ஒரு சிங்கத்தை பிடித்து கூண்டில் அடைத்து கப்பல் மூலம் வெளிநாட்டிற்கு அனுப்பினார்கள். அங்கே போன சிங்கத்தை ஒரு சர்க்கஸ் கூடாரத்தில் கட்டிவைத்தவர்கள் அதுக்கு வாழைப்பழத்தை உணவாக கொடுத்தார்களாம். உடனே சிங்கம் "நான் சிங்கம். எனக்கு வாழைப்பழம் கொடுக்கக்கூடாது" என்றதாம். உடனே ட்ரில் மாஸ்டர் சொன்னாராம்
"நீ சிங்கம்தான். ஆனால் இங்கே நீ வந்தது சிங்கத்தின் விசாவில் அல்ல... குரங்கின் விசாவில்" என்றாராம். அந்த சிங்கத்தின் கதைதான் நாஞ்சில் சம்பத்துக்கும்.

-----------




வைகோவை தனது கூட்டணிக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காவோ அல்லது வைகோ "நாஞ்சில் சம்பத்தை நீக்கினால்தான் நான் கூட்டணிக்கு வருவேன்" என்று நிபந்தனை விதித்திருப்பார் என்பதற்காகவோ நாஞ்சில் சம்பத்திடமிருந்து ஜெயலலிதா பதவியை பறித்திருக்க மாட்டார். ஏனெனில் ஜெயலலிதாவிடம் சம்பத்தை நீக்குங்கள் என்று அழுத்தம் கொடுக்கும் தைரியமெல்லாம் வைகோவிற்கு அறவே கிடையாது. அப்படியே வைகோ நிபந்தனை விதித்ததாக வைத்துக்கொண்டாலும் அதற்காகவெல்லாம் ஜெயலலிதா பணிந்து போக மாட்டார். அப்படி கேட்கும் அளவிற்கு வைகோவும்பலமானவர் அல்ல... அவர் சொன்னதை ஏற்றுக்கொள்வதற்கு ஜெயலலிதாவும் பலவீனமானவர் அல்ல...
அதேநேரம் வைகோ தன் கூட்டணிக்குள் வரும்போது சம்பத் இருந்தால் சங்கடமாக இருக்குமே என்றெல்லாம் ஜெயலலிதா நினைக்கவே மாட்டார். ஏற்கனவே அண்ணா.தி.மு.க. கூட்டணிக்குள் வைகோ வந்தபோது பழைய ம.தி.மு.க. காரர்களான எஸ்.எஸ்.சந்திரனும், நடிகை சி.ஆர்.சரஸ்வதியும் அங்குதான் இருந்தார்கள்.
வைகோவை கூட்டணிக்குள் கொண்டுவர ஜெ முடிவு செய்துவிட்டால் நா.சம்பத்தெல்லாம் என்ன செய்துவிட முடியும்? என்ன சொல்லிவிட முடியும்?. அப்படி ஒரு முடிவை ஜெ எடுத்துவிட்டால் அம்மாவின் ஆணைக்கிணங்க சம்பத்தும் வைகோவோடு மேடையேறித்தான் ஆவார். இதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஏனெனில் அது மே(லி)ட கட்டளை, மறுக்க முடியாது. வேறு வழியேயில்லாமல் அதையும் தற்காத்துதான் ஆகவேண்டும் இந்த நாஞ்சில் ஊர்க்காரர்.
ஆக, நாஞ்சில் சம்பத்தின் நீக்கத்திற்கு அவர் கொடுத்த பேட்டிதான் காரணமாக இருக்க வேண்டும். அவரின் நேற்றைய பேட்டியை பேட்டி என்று சொல்வதைவிட உளறல் என்றோ, லூஸ் டாக் என்றோ வைத்துக்கொள்ளலாம். அதுவே இப்ப ஆப்பாக முடிந்துள்ளதே தவிர வைகோவிற்காக நாஞ்சில் சம்பத்தை பலி கொடுக்கும் அளவுக்கு வைகோவும் ஒர்த் இல்லை வைகோவிற்காகவெல்லாம் பலி கொடுக்கும் அளவுக்கு நாஞ்சில் சம்பத்தும் ஒர்த்தில்லாத ஆடுதான்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


2 கருத்துகள்:

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.