என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, ஜூலை 19, 2013

11 என் நட்பை பலப்படுத்த உதவிய வாலி......





வாலி எத்தனையோ சினிமா பாட்டெழுதியிருந்தாலும் எனக்கு அவரை பிடிக்க ஆரம்பித்தது 1990-களில் மத்தியில் விகடனில் ராமாயனத்தை கவிதை வரிகளில் அவர் எழுதிய அவதார புருஷன் என்னும் தொடருக்காகத்தான்.

காமன் கதையெழுதி 
காயங்கள் பட்டவன் 
இன்று ராமன் கதையெழுதி 
ரணங்களை ஆற்ற 
வந்துள்ளேன்.

என்று ஆரம்பித்து

ஒப்புக்கும் உப்பிக்கும் எழுத வந்தவன் 
இன்றுஅந்த தப்புக்கு பிரயாசித்தமாய்...
அந்த ஒப்பில்லா தலைவனை...
தப்பில்லாத் தமிழில் பாட வந்திருக்கிறேன்

என்று தொடர்வார். மிக அழகான தமிழில் கவிதை நடையில் அவர் எழுதிய காவியங்களில் அதுவும் ஒன்று.

விகடனில் தொடராக வந்தபோது வாரந்தோறும் படித்த நான் அது தொகுப்பாக புத்தகமாக வந்தபோதும் வாங்கி ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். அந்த புத்தகத்தை என்னிடமிருந்து இரவல் வாங்கிய நண்பரொருவர் பஸ் பயணத்தின் போது படித்துக்கொண்டு போயிருக்கிறார். போனவர் ஞாபக மறதியாய் பஸ்சிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டார். அப்படி வைத்துவிட்டு வந்த புத்தகம் எங்கள் ஊர் ஸ்டேட் பேங்கில் மேனேஜராக இருந்தவர் கையில் எதார்த்தமாக கிடைத்திருக்கிறது. எடுத்தவர் அதில் குறித்திருந்த என் பேரையும் முகவரியையும் கவனித்து அடுத்த நாள் பேங்க் க்ளார்க்கிடம் கொடுத்து அனுப்பினார்(நான் எப்போது புத்தகம் வாங்கினாலும் அதில் என் பெயரையும், முகவரியையும் குறித்து வைத்துவிடுவேன்).




புத்தகம் கைக்கு வந்ததும் நான் பேங்க் மேனேஜருக்கு நன்றி சொல்ல நேரில் போனேன். அப்போது நிறைய விஷயங்களை பேசியவர்,வேறு என்னன்ன புத்தகங்கள் வைத்திருக்கிறீர்கள் தம்பி என்று கேட்டார். சொன்னேன். என்னை வியப்பாய் பார்த்து “அதில் சில புத்தகங்களை எனக்கு படிக்க தரமுடியுமா, நான் திருப்பி தந்துடுறேன். பஸ்சில் எல்லாம் வச்சிட்டு வரமாட்டேன்” என்றார்.
என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க என்று சொல்லிவிட்டு அப்போதே வீட்டுக்கு போய் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை அவருக்கு கொடுத்தேன்.

அவருக்கு சொந்த ஊர் சென்னை. அவர் மனைவிக்கோ பாண்டிச்சேரி. இவர் வாரந்தோறும் சென்னை சென்று அங்கிருந்து பாண்டிக்கு போவார். அப்படி போகும்போது ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஒரு புத்தகத்தை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு போவார். அவர் படித்து முடித்ததும் அவர் மனைவிக்கும் படிக்க தருவார். இந்த வாரம் எடுத்துக்கொண்டு போகும் புத்தகத்தை அவர் படித்துவிட்டு அவர் மனைவியிடம் கொடுத்துவிட்டு வந்துவிடுவார். அடுத்த வாரம் சென்னை செல்லும்போது அந்த புத்தகத்தை எடுத்துவந்து என்னிடம் தந்து வேறு ஒரு புதிய புத்தகத்தை வாங்கிப்போவார். இது வழக்கமாக நடந்தது. புத்தகத்தின் மூலம் எங்கள் நட்பு வளர்ந்தது. பலமாகியது.

புத்தகங்கள் நல்ல நண்பன் மட்டுமல்ல......நல்ல நண்பர்களையும் தேடி தருகிறது 


Post Comment

இதையும் படிக்கலாமே:


11 கருத்துகள்:

  1. சரி தான்,புதிய நண்பரைத் தேடிக் கொடுத்ததோடு,உதவுதலுக்கும் உங்களுக்கு உதவியிருக்கிறார்,வாலி ஐயா!

    பதிலளிநீக்கு
  2. புத்தகம் நல்ல நண்பன்னு சொல்லுவாங்க. அந்த நண்பன் இன்னொரு நண்பனை தேடி தந்திருக்கு. வாழ்த்துகள்.

    அதுக்கு காரணமான வாலி ஐயாவின் இறப்புக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

    பதிலளிநீக்கு
  3. வார்த்தை சித்தர் வாலி... அற்புதமான எழுத்தாற்றல் மிக்கவர்... அவரின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது

    பதிலளிநீக்கு
  4. நல்ல அனுபவமாக இருக்கிறதே! வாலி மூலமாக கிடைத்த நண்பரை நினைவு கூர்ந்து அவருக்கு அஞ்சலி செய்த விதம் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. புத்தகங்கள் நல்ல நண்பன் மட்டுமல்ல......நல்ல நண்பர்களையும் தேடி தருகிறது

    உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  6. புதிய நட்பை தேடி கொடுத்த வாலிக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. புத்தகங்கள் எனக்கும் பல நட்புகள்ளை தந்திருக்கிறது.!

    பதிலளிநீக்கு
  8. வாலிக்கும் ,ரஹீம் கஸாலிக்கும் இருந்த புத்தக நட்பு அறிய மகிழ்ச்சி !

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.