என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், ஜூலை 10, 2013

15 இந்த ”அனுபவம்” உங்களுக்கு இருக்கா?



பத்து வருடங்களுக்கு முன்பு, செல்போன் அப்போதுதான் எங்கள் பகுதிக்கு வந்த நேரம். என் நண்பனிடம் மட்டும் ஒரு செல்போன் இருந்தது. அந்த செல்போனை கடன் வாங்கிக்கொண்டு  என் நண்பர்களுடன் பக்கத்து ஊரான கோட்டைப்பட்டிணத்திற்கு ஒரு திருமணத்திற்காக சென்றேன்.

செல்போனை கடன்வாங்கிட்டேனே தவிர, அந்த போனை எப்படி இயக்குவது என்று தெரியவில்லை எனக்கு. இத்தனைக்கும் எந்த வசதியும் இல்லாத சாதாரண செல் அது. எப்படி கால் வந்தால் எப்படி அட்டெண்ட் செய்வது என்று அந்த நண்பனிடமே கேட்டு தெரிந்துகொண்டேன். அதன்பின் கோட்டைப்பட்டினத்தில் இருக்கும் என் நண்பனுக்கும் அந்த (இரவல்) செல் நம்பரை கொடுத்துவிட்டேன்.


நாங்கள் சென்றது வாடகை கார் என்பதால் வழியில் அறந்தாங்கியில் நடந்த இன்னொரு நண்பரின் திருமணத்திலும் கலந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து அங்கும் போனோம். போன இடத்தில் மதியம் ஆகிவிட்டது. இன்னும் அறந்தாங்கியை விட்டு புறப்படவில்லை. அப்போது கோட்டைப்பட்டினத்தில் இருக்கும் என் நண்பனிடமிருந்து போன்.

ஏப்பா எங்கே இருக்கே?

இதோ வந்துக்கு இருக்கோம்.

எங்கே வந்துக்கு இருக்கீங்க?

ஆவுடையார் கோவிலை தாண்டி வந்துக்கு இருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவோம்...

சரி சரி சீக்கிரம் வாங்கப்பா....கல்யாணமே முடிஞ்சிச்சு...சாப்பாட்டுக்காவது வந்து சேருங்க....

சரி என்று சொல்லி போனை பாக்கெட்டுக்குள் வைத்துவிட்டு,
அங்கிருந்த என் நண்பர்களிடம்...

”சீக்கிரம் வாங்க கிளம்புவோம்.....இன்னும் அறந்தாங்கிலேருந்து கிளம்பாமல் இருக்கோம். ஆனா, ஆவுடையார்கோவில் தாண்டி வந்துட்டோம்ன்னு பொய் சொல்லிட்டேன் ”

என்று சொல்லி ஒரு வழியாக அங்கிருந்து எல்லோரையும் கிளப்பினேன். கோட்டைப்பட்டினம் செல்லும்போது மதியம் மூனு மணி ஆகிவிட்டது.
எனக்கு போன் செய்த நண்பன்தான் எங்களை வரவேற்றான்.

ஏப்பா இவ்வளவு நேரம்? நல்லவேளை சாப்பாட்டுக்காவது வந்தீங்களே....சரி ஆவுடையார் கோவிலை தாண்டியவங்க இங்கே வர இவ்வளவு நேரமா?

இல்லை...வர்ர வழியில.............. என்று  இழுத்தேன் நான்.
..
எல்லாம் எனக்கு தெரியும்...நீ அறந்தாங்கியில் இருந்துக்கே ஆவுடையார் கோவில் தாண்டி வந்தேன்னு பொய் சொன்னது எனக்கு தெரியும்?

அது வந்து.....சரி உனக்கு எப்படி தெரியும்?

அதுவா...நீ என்னோடு போன் பேசிட்டு கட் பண்ணாம அப்படியே பாக்கெட்டுல போட்டுக்கிட்ட போல...அதான் நீ பேசியது எல்லாம் எனக்கு விளங்குச்சு


அப்புறம்தான் எனக்கு விளங்கியது....வரும் போன் காலை எப்படி அட்டெண்ட் செய்வது என்று கேட்டு தெரிந்துகொண்ட நான், பேசி முடித்தப்பின் எப்படி கட் பண்ணுவது என்று தெரிந்து கொள்ளவில்லை. பேசி முடித்தபின் தானாக கட்டாகி விடும்ன்னு அப்படியே சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டிருக்கிறேன். ஹி....ஹி....


Post Comment

இதையும் படிக்கலாமே:


15 கருத்துகள்:

  1. பெயரில்லா10 ஜூலை, 2013, 5:38:00 PM

    நல்ல அனுபவம் தான் உங்களுக்கு, எனக்கும் இது பல முறை நடந்துள்ளது. ஆரம்பத்தில் கட் செய்ய தெரியாததால் என்ற போதும், பின்னர் பல முறை பழக்க தோசத்தில் கட் செய்ய மறந்து விடுவதும் உண்டு. ஒருமுறை அப்பாவிடம் பேசி விட்டு கட் செய்ய மறந்து விட்டேன், கல்லூரி வகுப்பில் இருந்து தியேட்டர் சென்று விட்டோம், போன் இயங்கிக் கொண்டே இருந்திருக்கின்றது. தியேட்டர் போனது அப்பாவிடம் சொல்லாமல், அவர் கூப்பிட்டதோ லாண்ட் போனில் இருந்து, சீக்கிரம் கட் ஆகாது, நாங்கள் பேசியதை எல்லாம் கேட்டாரா, இல்லையா என்பதே எனக்குத் தெரியவில்லை. விவரம் தெரிந்த பின் வீட்டுக்கு தயங்கி தயங்கி போனேன், ஆனால் ஒன்றும் பெரிதாய் நடக்கவில்லை, ஆனால் கேட்டாரா, இல்லையா என்பதை நான் இதுவரைக்கும் அவரிடமும் கேட்கவில்லை, அவரும் சொல்லவில்லை. ம்ம்ம்ம். .. இந்த போன் படுத்திய பாடுகள் அப்பப்பா, !

    பதிலளிநீக்கு
  2. என்னோட அனுபவத்தையும் கொஞ்சம் சொல்லுறேன்....நமக்கு அதே செல்போன் அறிமுக கால கட்டம் ... சகோதரி சென்னையில் உள்ள அரசு பி எட் கல்லூரியில் படிக்க சென்ற நேரம் ...அப்போது எங்களது பெரிய அம்மாவின் மகனிடம் தான் மொபைல் இருந்தது.. நண்பியின் செல்போன் உதவியுடன் சகோதரியிடம் இருந்து அழைப்பு ...அவர் நேராக எங்கள் வீட்டிற்கு வந்து பின் அவரது மொபைலிலிருந்து சகோதரியின் நண்பியின் மொபைலுக்கு அழைத்தார் ...காணாததை கண்டோம் அல்லவா..!! அவரும் இருந்து இருந்து பார்த்தார்...ம்ம்ம்..ஹ்ம்ம்..பின்பு பேசி முடித்துவிட்டு தாருங்கள் என்று பக்கத்தில் இருக்கும் அவரது அக்காவின் வீட்டுக்கு சென்றுவிட்டார்...

    பேசிவிட்டு மொபைலை ஆப் செய்ய வேண்டும் என்ற அடிப்படை கூட அறிந்திருக்கவில்லை ! சேம் ப்ளட் ...சகோதரிக்கும் தெரிந்திருக்க வில்லை போலும்.. பேசிவிட்டு கொஞ்சம் சாவகாசமாக அண்ணனிடம் கொண்டு போய் கொடுக்கும் போது தான் தெரிந்தது சாவகாசமாக சென்றதற்கும் சேர்த்து பைசா எடுக்கப்பட்டது என்று...!! அதற்கப்புறம் அண்ணன் ஏனோ எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவதே இல்லை..காரணம் தான் தெரிந்திருக்கவில்லை ...!

    பதிலளிநீக்கு
  3. உண்மை உண்மை..! அதென்னமோ தெரியல... இந்த செல்ஃபோனை எடுத்து பேசும்போது எல்லாரும் பக்காவா நடிக்க ஆரம்பிச்சிடுறோம்... இந்த மாதிரி தற்காலிக ஒலிநாடகம் நிறைய பேரு செல்ஃபோன்ல நடந்துக்கிட்டுதான் இருக்கு..!

    அன்புடன்
    ஹரீஷ் நாராயண்

    பதிலளிநீக்கு
  4. ஆம்.. உண்மைதான்..நிறைய பேருக்கு இதுபோல நடந்திருக்கு.. மற்றவர்கள் அதை 'கட்' செய்யாமலேயே இருக்கும்போது, அவர்களுடைய ரகிசியம் நமக்குத் தெரிந்துவிடுகிறது..

    பதிலளிநீக்கு
  5. ஆரம்ப காலத்தில் என் நிலையும் இதுதான்
    பேசியவர்கள் கட் செய்திருந்தால்தான்
    போன் கட் ஆகி இருக்கும்
    சுவாரஸ்யமான பதிவு

    பதிலளிநீக்கு
  6. ஹ... ஹா...
    இந்த அனுபவம் எல்லாருக்கும் இருக்கு....

    பதிலளிநீக்கு
  7. பைசாவும் காலியாகியிருந்திருக்கணுமே ....

    பதிலளிநீக்கு
  8. செல் போனை காதிட்க்கு கிட்ட கொண்டு வந்து பேசாமல், செல் போனைக்கு கிட்ட காதை கொண்டு போய் பேசும் ஆட்களும் இருக்கிறர்கள்

    பதிலளிநீக்கு
  9. நல்ல அனுபவம்! பலருக்கும் நேர்ந்திருக்கும் ஒரு அனுபவம்! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. நான் இப்போ ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் மொபைலே வாங்கினேன்.யூஸ் பண்ணத் தெரியும்,அதனால...................

    பதிலளிநீக்கு
  11. இந்த அனுபவம் எல்லோருடைய வாழ்க்கையுலும்.......

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.