என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், அக்டோபர் 29, 2012

8 தடம் மாறும் எம்.எல்.ஏ.க்களும், தடுமாறும் கேப்டனும்




ஒரு மாநிலத்தின் முதல்வரை எதிர்கட்சியினர் தன் தொகுதி நலனுக்காகவும், தனக்கு வாக்களித்த மக்களின் மேம்பாட்டிற்காகவும் சந்திப்பது சகஜம்தான். ஆனால், அது இப்போதல்ல..... முன்பு, அதாவது அரசியல் ஓரளவு நாகரீகமாக நடந்துகொண்டிருந்த கால கட்டத்தில். ஆனால் இப்போது அப்படி சந்திப்பது என்பது தீண்டத்தகாத காரியம் போல் ஆகிவிட்டது தமிழகத்தில். ஆளுங்கட்சியினரை இப்போது ஒரு எதிர்கட்சி எம்.எல்.ஏ.,சந்தித்தாலே ஆச்சர்யமாக பார்க்கப்படும் கால கட்டத்தில், எதிர்கட்சியான தே.மு.தி.க.,வை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேர் முதல்வர் ஜெயாவை சந்தித்து அனைவரின் புருவத்தையும் உயர வைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் ஆளுங்கட்சிக்கு விலை போவதும், ஊதுகுழழாக செயல்படுவதும் வழக்கமான ஒன்றுதான். கடந்த ஆட்சியில் மதுரை அண்ணா.தி.மு.க., எம்.எல்.ஏ.,சண்முகம் அப்போதைய அமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியதன் மூலம் ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளாகி கட்சியை விட்டு கட்டம் கட்டப்பட்டு பின்னர் இறந்துபோனார். அதன் பின் அவரின் அடிச்சுவட்டை பின்பற்ற துவங்கினர் சிலர். கோவில்பட்டி அண்ணா.தி.மு.க.,எம்.எல்.ஏ.,ராஜேந்திரனும், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணனும் தி.மு.க.,பொதுக்குழுவிலேயே அண்ணா.தி.மு.க.,கரை வேட்டியுடன் கலந்துகொண்டு பரபரப்பை உண்டாக்கினர்.

கட்சியிலிருந்து சசிகலாவால் ஓரங்கட்டப்பட்ட மயிலாப்பூர் எம்.எல்.ஏ.,எஸ்.வி.சேகர் சட்டசபையில் ஆளும் தி.மு.க.,ஆதரவு நிலையை எடுத்தார். இவர்களையெல்லாம் மிஞ்சும் விதமாக  திருச்செந்தூர் எம்.எல்.ஏ.,அனிதா ராதாகிருஷ்ணன்  அறிவாலயத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். 
அதேபோல் ம.தி.மு.க.,விலிருந்து தொண்டமுத்தூர் எம்.எல்.ஏ.,கண்ணப்பன், கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன், திருப்பூர் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,கோவிந்தசாமி போன்றோர்களும் தி.மு.க.,வில் தன்னை இணைத்துக்கொண்டனர்.சரி இதையெல்லாம் விடுங்க....

1991-ஆம் ஆண்டு. காங்கிரசுடன் கூட்டணி போட்டிருந்தார் ஜெயலலிதா. ராஜீவ் காந்தி படுகொலையால் சற்றேறக்குறைய தமிழகத்தின் அனைத்து தொகுதிகளையும் இந்தக்கூட்டணி கைப்பற்றியது. அசுர பலத்துடன் தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார் ஜெயா. எதிர்கட்சியாக அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ். நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது கூட்டணி வண்டி. திடீரென என்ன நினைத்தாரோ ஜெயலலிதா.ஒருவேளை ராஜீவ்காந்தி படுகொலையால்தான் இவ்வளவு இடங்களையும் அண்ணா.தி.மு.க.,பிடிக்க முடிந்தது என்ற பேச்சு ஜெயலலிதாவிற்கு எரிச்சலை தந்திருக்க வேண்டும்.

சிலமாதங்களில் மதுரையில் நடந்த அண்ணா.தி.மு.க.,மாநாட்டில் ராஜீவ் ரத்தத்தால் நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை என்று பகிரங்கமாக ஒரு குண்டை தூக்கிப்போட்டு அத்துடன் காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்தார். நேற்றுவரை சட்டசபையில் எதிர்கட்சியாக இருந்த காங்கிரஸ் அதன் பின் எதிரிக்கட்சியாக மாறியது. ஆனாலும் அப்போதும் காங்கிரஸை சேர்ந்த சில எம்.எல்.,ஏ.,க்கள் ஜெயலலிதாவுடன் இணக்கமாகவே இருந்தனர். அவ்ர்களில் முக்கியமானவர்கள் சேப்பாக்கம் எம்.எல்.ஏ.,ஜீனத் சர்புதீன், பேராவூரணி எம்.எல்.ஏ.,சிங்காரம் (இன்னும் இருவரின் பெயர் நினைவில் இல்லை). சட்டசபையில் இவர்கள் அடிக்கும் ஜால்ராவால் இவர்கள் ஜெயா காங்கிரஸ் என்றே அழைக்கப்பட்டனர்.




இப்போதும் அப்படி ஒரு காலம் திரும்புகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. மதுரை மத்திய தொகுதி சுந்தர்ராஜன், திட்டக்குடி தமிழழகன், ராதாபுரம் மைக்கேல் ராயப்பன், பேராவூரணி நடிகர் அருண்பாண்டியன் ஆகிய தே.மு.தி.க.,எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதாவை சந்தித்தன் மூலம் கேப்டனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்கள். அரசியலில் இது சகஜம்தான் என்றாலும் அப்படி சந்தித்தவர்களில் விஜயகாந்திற்கு நெருக்கமாக இருக்கும் சுந்தர்ராஜன், நடிகர் அருண்குமார் ஆகியோர் இருப்பதுதான் பலரின் அதிர்ச்சிக்கு காரணம்.

எனக்கு மரியாதை இல்லை. தன் ஐம்பது ஆண்டுகால நட்பை விஜயகாந்த் மதிக்கவில்லை என்று சுந்தர்ராஜன் தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார். விஜயக்கந்த் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பிருந்தே சுந்தர்ராஜன், அ.செ.இப்ராகிம் ராவுத்தர், ராமு வசந்தன் ஆகியோர் நண்பர்கள். இதில் ராமு வசந்தன் சில காலம் தே.மு.தி.க.,பொதுச்செயலாளராக இருந்துவிட்டு இறந்துவிட்டார். அ.செ.இப்ராகிம் ராவுத்தர் விஜயகாந்துடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக முன்பே அண்ணா.தி.மு.க.,வில் இணைந்துவிட்டார். சுந்தர்ராஜன் மட்டுமே பாக்கி. இப்போது அவரும் ஆளுங்கட்சி ஆதரவு மனநிலைக்கு வந்துவிட்டார்.



அதைப்போல நடிகர் அருண்பாண்டியன். இவர் திரைப்பட கல்லூரியில் படித்த காலத்திலிருந்தே விஜயகாந்திற்கு பழக்கம். தன் ஊமை விழிகள் படத்தில் ஒரு சிறு வேடம் கொடுத்து அருன்பாண்டியனை நடிக்க அழைத்து வந்தார் கேப்டன். அருண்பாண்டியன் இயக்கிய தேவன் படத்தில் கூட விஜயகாந்த் கவுரவ வேடத்தில் நடித்திருப்பார். இப்படிப்பட்ட நண்பர்களே கோபம்கொள்கிறார்கள் என்றால் விஜயகாந்தின் நடவடிக்கையை, சர்வாதிகாரப்போகை பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை. சசிகலா தவிர மற்றவர்களுக்கு ஜெயா கொடுக்கும் மரியாதையை அனைவரும் அறிந்தே இருப்பார்கள். அப்படி இருந்தும் இவர்கள் விஜயகாந்தை விட்டு ஜெயலலிதாவின் பக்கம் ஓடுகிறார்கள் என்றால் விஜயகாந்தின் சர்வாதிகாரம் ஜெயாவை விட அதிகமாகத்தான் இருந்திருக்க வேண்டும். அதற்காக இவர்கள் எடுத்திருக்கும் முடிவு சரிதானா?

இனி இவர்கள் தே.மு.தி.க.,வுடன் இணக்கமாக செயல்பட முடியாது. அதற்கு விஜயகாந்தும் ஒத்துழைக்க மாட்டார். வேண்டுமானால், தனி அணியாக செயல்படலாம். அண்ணா.தி.மு.க.,விலும் இணைய முடியாது. அப்படி இணைந்தால் எம்.எல்.ஏ.,பதவி பறிபோய்விடும். அப்படி பறிபோகாமல் இருக்க வேண்டுமென்றால் இவர்களுடன் இன்னும் சில எம்.எல்.ஏ.க்கள் கை கோர்க்க வேண்டும்.அதாவது ஒரு கட்சியின் ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.க்களில் மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏ.,க்கள் அந்தக்கட்சியிலிருந்து வெளியேறினால் அவர்களின் எம்.எல்.ஏ.,பதவி ஆபத்தில்லாமல் தப்பித்துவிடும்.அதற்கான வாய்ப்பும் இருப்பதாகவே தோன்றுகிறது. இல்லாத பட்சத்தில் இந்த  எம்.எல்.ஏ.க்கள் அப்படியே பதவியை ராஜினாமா செய்தால் அதன்பின் ஜெயலலிதா இவர்களை கறிவேப்பிலை ஆக்கிவிடுவார். பார்க்கலாம் இனி என்ன செய்யப்போகிறார்கள் என்று?....



அதேநேரம்....விஜயகாந்த் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ளும் காலம் வந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். இத்தனைக்கு பிறகும் அவர் மாறவில்லை என்றால் இன்னும் சில எம்.எல்.ஏ.க்கள் அணி மாறலாம். அப்படி அணி மாறும் பட்சத்தில் தே.மு.தி.க.,வின் எதிர்கட்சி அந்தஸ்து பறிபோய் அது தி.மு.க.,விற்கு போய்விடும். இப்பவே ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக தி.மு.க., செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அப்படி செயல்படும் தி.மு.க., அதிகாரப்பூர்வமான எதிர்கட்சியாக மாறுவதும் மாறாததும் விஜயகாந்த் மாறுவதில் தான் இருக்கிறது.








Post Comment

இதையும் படிக்கலாமே:


8 கருத்துகள்:

  1. நமக்குள்ள ஒரு வேவ்ஸ் ஓடுதுண்ணே ...!

    விஜயகாந்த் மாறாவிடில் திமுக எதிர்கட்சியாக மாறிவிடும்...சூப்பர் பஞ்ச் ....

    பதிலளிநீக்கு
  2. அருமையாக மாறும் எம் எல் ஏக்கள் பட்டியலைத்
    தந்தவிதமும் முடிவாகச் சொன்னத் தகவலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. மூன்றாமானவர் கோவை செல்வராஜ்
    அருமையான அரசியல் பதிவு
    என்னையும் பதிவிட தூண்டுகிறது நண்பா

    பதிலளிநீக்கு
  4. TAMIL MANAM 7
    இன்று நம்ம கடையில்
    கொலை+ தற்கொலை = சிறை
    http://tamilyaz.blogspot.com/2012/10/robbery.html

    பதிலளிநீக்கு
  5. பார்ப்போம் அண்ணே .. என்ன நடக்கிறது என்று ..
    கேப்டன் இன்னிங்க்ஸ் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்

    பதிலளிநீக்கு
  6. 29 ல 4 போனா 29 தான்

    இது அரசியல் கணக்க

    பதிலளிநீக்கு
  7. \\அப்படி இருந்தும் இவர்கள் விஜயகாந்தை விட்டு ஜெயலலிதாவின் பக்கம் ஓடுகிறார்கள் என்றால் விஜயகாந்தின் சர்வாதிகாரம் ஜெயாவை விட அதிகமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.\\ ஆட்சி அதிகாரம் ஜெயா கையில் இருப்பதே காரணம் என நான் நினைக்கிறேன்...........

    பதிலளிநீக்கு
  8. கோவம் ஒரு மனிதனை எங்கே கொண்டு போய் விடுகிறது என்று பார்க்க போகிறோம் ஒரு மனிதனுக்கு கோவம் அழகல்ல அதுவே தலைவன் என்றால்?

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.