என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், அக்டோபர் 23, 2012

11 1972-ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் நடந்தது என்ன?-ஒரு முழுமையான தொகுப்பு





காமெடி சட்டமன்றம் 07.12.1972 பற்றிய பின்னணி தகவல்கள் பதிவு போடமுடியுமா? (Ref:: ஜூ.வி. 17.10.2012 கேள்வி பதில்) என்று ஒரு கேள்வியை முகப்புத்தகம் வழியாக அண்ணன் நிஜாமுதீன் அவர்கள் கேட்டிருந்தார்கள். அவரின் கேள்விக்கான பதில்தான் இது 


தி.மு.க.,வில் கணக்கு கேட்டதால் பிணக்கு ஏற்பட்டு அண்ணா.தி.மு.க.வைஆரம்பித்த புதிதில் அப்போதைய சபாநாயகர் கே.ஏ.மதியழகனை அடிக்கடி ரகசியமாக சந்தித்தார் எம்.ஜி.ஆர்., இதன் விளைவாக, கே.ஏ.மதியழகனும் எம்.ஜி.ஆர்.,பக்கம் சாய்ந்த்தார். அவர் அப்படி சாயவும் காரணம் இருந்தது. அண்ணா அமைச்சரவையிலும், அவர் மறைவிற்கு பின் முதல்வராக பொறுப்பேற்ற கலைஞர் அமைச்சரவையிலும் நிதி மற்றும் வருவாய்துறை அமைச்சராக இருந்தார் மதியழகன்.

முந்தைய (1969-71) கலைஞர் ஆட்சியில் கே.ஏ.மதியழகனின் சகோதரர் கே.ஏ.கிருஷ்ணசாமி பெயரில் வாங்கப்பட்ட சொத்து காரணமாக ஒரு பிரச்சினை வந்தது. பதவியை துஷ்பிரயோகம் செய்து தன் தம்பிக்கு மதியழகன் உதவினார் என்று அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கினார் கலைஞர். அதனால் கலைஞர் மீது அதிருப்தியில் இருந்தார் மதியழகன். கலைஞர் இரண்டாவது முறை(1971) முதல்வரானதும், மதியழகனுக்கு அமைச்சர் பதவி தராமல் சபாநாயகர் ஆக்கியிருந்தார். இது மேலும் அதிருப்தியை தந்தது அவருக்கு. இந்த அதிருப்தியை எம்.ஜி.ஆர்., சரியாக பயன்படுத்திக்கொண்டு மதியழகனை தன் பக்கம் சாய்த்தார்.

அடுத்ததாக, ஆட்சிக்கு எதிராக சென்னையில் அண்ணா.தி.மு.க.,வும், கம்யூனிஸ்டும் நடத்திய பிரமாண்டமான ஊர்வலத்தில் கலந்துகொண்டார் மதியழகன். அனைவருக்கும் பொதுவாக இருக்கவேண்டிய சபாநாயகர் எப்படி ஒருபக்கம் சாயலாம் என்று தி.மு.க.,வில் குரல்கள் ஒலித்தது.


இதன்பின், சட்டசபை கூடியது......
இன்றைய அமைச்சரவை நம்பிக்கை இழந்துவிட்டது. ஆகவே இந்த அமைச்சரவை நீடிப்பது சட்டவிதிகளுக்கு எதிரானது என்று குற்றம் சாட்டினார் எம்.ஜி.ஆர்.,அவரின் கருத்தை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் கே.ஏ.மதியழகன், எம்.ஜி.ஆரின் குற்றச்சாட்டிற்கு முதல்வரின் பதில் என்ன?...என்று கேட்டதோடு மட்டுமல்லாமல் சட்டசபையை கலைத்துவிட்டு மறுதேர்தலை சந்தியுங்கள். இந்த சட்டசபையை கலைக்க கவர்னருக்கு யோசனை தெரிவித்துக்கொள்கிறேன். என்று சொல்லிவிட்டு சட்டசபையை ஒத்திவைத்தார்.

சபாநாயகரை  கைக்குள் போட்டுக்கொண்ட எம்.ஜி.ஆரின் விளையாட்டை கலைஞர் ரசிக்கவில்லை. ஒரு அதிரடி முடிவை எடுத்தார். இதுவரை இந்திய சட்டசபை வரலாற்றில் அப்படி ஒரு விசித்திரம் நடந்தது இல்லை  

 

மதியழகன் டிசம்பர்-5 ஆந்தேதிக்கு சபையை ஒத்திவைத்தார். ஆனால், அதற்கு முன்னரே சபையை கூட்ட முடிவு செய்தார் கலைஞர். ஆனாலும், சபாநாயகர் சபையை ஒத்திவைத்துவிட்டால் பின்னர் சபாநாயகர் அறிவித்த தேதியில்தான் சபையை கூட்டமுடியும் என்பது விதி.

சபா மீண்டும் சபை கூடுமென அறிவித்ததோ டிசம்பர்- 5. ஆனாலும் அதுவரை பொறுக்காத கலைஞர் கவர்னரை சந்தித்தார்.  அந்தக்கூட்டத்தொடர் அன்றோடு முடிந்துவிட்டதாகவும் புதிய கூட்டத்தொடர் டிசம்பர் 2 ஆம் தேதியே கூடுமென கவர்னரையே அறிவிக்க வைத்தார்.

இதனால், கடுப்பான மதியழகன், சபையைக் கூட்டவும், ஒத்தி வைக்கவும் சபாநாயகருக்கே உரிமையுண்டு. தம் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் கவர்னர் கூட்டத் தொடரையே ரத்து செய்தது செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அப்படி டிசம்பர்-2 ஆம் தேதி கூட்டப்படும் சட்டமன்றத்தில்  சபா நாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்று கொண்டுவர முடிவு செய்தது தி.மு.க. அதன்படி தீர்மானம் தயாரிக்கப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 185 எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்திருந்தனர். அதேநேரம், எம்.ஜி.ஆரும் கலைஞர் அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவர முடிவுசெய்தார்.

திட்டமிட்டது போல டிசம்பர்-2 சட்டமன்றக் கூடியது.
சபா மீது கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரினார் ஆற்காடு வீராசாமி.
185 எம்.எல்.ஏ.,க்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட மதியழகன் இனி சபா நாயகராக நீடிக்கக்கூடாது இந்த சபைக்கு விருதுநகர் சீனிவாசன் (காமராஜரை தோற்கடித்தாரே...அவருதான்) தலைமை தாங்குவார் என்று அறிவித்தார் நாவலர் நெடுஞ்செழியன்.

இத்தனைக்கு பிறகும் மதியழகன் சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்திருந்ததால், அவருக்கு அருகில் மற்றொரு நாற்காலி போடப்பட்டு, அதில் துணை சபா சீனிவாசன் அமரவைக்கப்பட்டார். தி.மு.க.,மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை முதலில் விசாரிக்க வேண்டும் என்றனர் எம்.ஜி.ஆரும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும்.
சபா மதியழகன் மீது கொண்டுவரப்பட்ட தீர்மானத்தைத்தான் முதலில் விசாரிக்க வேண்டுமென கூறினர் தி.மு.க.,வினர். சபை ஒரே கூச்சலும், அமளியாகவும் இருந்தது.


எம்.ஜி.ஆரின் தீர்மானத்தை விவாதத்திற்காக எடுத்துக்கொண்டதாக அறிவித்தார் மதியழகன். எம்.ஜி.ஆரும் பேச ஆரம்பித்தார். ஆனால் மைக் துண்டிக்கப்பட்டது. ஒலிபெருக்கி இல்லாமலே பேசினார் எம்.ஜி.ஆர். கூச்சலால் அவரின் பேச்சு யாருக்கும் கேட்கவில்லை.

இன்னொருபக்கம் சபா நாயகர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்தார் துணை சபா சீனிவாசன். மீண்டும் சபையை ஒத்திவைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் மதியழகன், கூடவே எம்.ஜி.ஆரும். சட்டமன்றம் செத்துவிட்டதாக அறிவித்தார் எம்.ஜி.ஆர்., இனிமேல் சட்டசபைக்கு நான் வரவே மாட்டேன் என்றும் அறிவித்தார்.(சொன்னதுபோலவே தி.மு.க.,ஆட்சி முடியும் வரை அவர் சட்டசபைக்குள் நுழையவே இல்லை. பின்னர் முதல்வராகத்தான் நுழைந்தார் எம்.ஜிஆர்) அப்போது எம்.ஜி.ஆர்.,மீது செருப்பு வீசப்பட்டது. அதை பொருட்படுத்தாமல் ஏற்கனவே மதியழகன் தம்பி கே.ஏ.கிருஷ்ணசாமியின் ஏற்பாட்டில் தயாராக நின்றிருந்த காரில் மதியழகனோடு கிளம்பினார்.

எம்.ஜி.ஆரும், மதியழகனும் வெளியேறிய பின்னரும் சபையை தொடர்ந்து நடத்தினார் சீனிவாசன்.

அதன்பின் அவை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் டிசம்பர்-7 ஆம் தேதி கூடியது. அப்போது எம்.ஜி.ஆரால் கலைஞர்அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சரவை மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் ஒன்றை கலைஞர் கொண்டுவந்து வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.
அந்த தீர்மனத்திற்கு ஆதரவாக 176 வாக்குகள் கிடைத்தது, எதிராக 1 வாக்குகூட கிடைக்கவில்லை. ஆம்...ஆளே இல்லாமல் டீ ஆற்றுவதுபோல எம்.ஜி.ஆரும். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் இல்லாமலே தீர்மானம் நிறைவேறியது.





Post Comment

இதையும் படிக்கலாமே:


11 கருத்துகள்:

  1. STDன்னா வரலாறு தானே ... அவ்வ்வ்வ் ...நல்ல பதிவு சகோ ஆனா நமக்கு அரசியல் பண்ணவும் படிக்கவும் தெரியாது ஹி ஹி

    பதிலளிநீக்கு
  2. அட .. இதுல எவ்வளவு இருக்கா ?

    பதிலளிநீக்கு
  3. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...

    பதிலளிநீக்கு
  4. அருமையான அரசியல் வரலாற்றை சொல்லும் பதிவு
    அறியாத அரிய அரசியல் செய்திகள்
    நன்றி நண்பா......

    பதிலளிநீக்கு
  5. ஆகா, வரலாறு ரொம்ப முக்கியம் அல்லவா?
    தெளிவான, முழுமையான பின்னணி தகவல்களை, முன்னணிக்கு கொண்டு வந்த சுவையான பதிவு!

    பதிலளிநீக்கு
  6. எனது கேள்வியுடனிணைந்த வேண்டுகோளையேற்று, மிக சுறுசுறுப்புடன் ஆய்வு செய்து தொகுத்து வழங்கியமைக்கு நன்றி தம்பி கஸாலி!

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு. இதில் இன்னொன்றையும் பதிவு செய்ய விரும்புகிறேன். திரு மதியழகன் அவரை சபாநாயகர் பதவி நீக்கம் செல்லாது என்றும், தான்தான் சபாநாயகர் என்றும் திரு சீனிவாசன் சபாநாயகராக இருக்க இயலாது என வழக்கு தொடர்ந்திருந்தார். அதற்கு சென்னை உயர்நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ‘Though the speaker was physically present he was constitutionally absent.’

    பதிலளிநீக்கு
  8. Myself and my Dad were walking outside Lyola College one Sunday morning when we noticed a familiar face walking on our side. When he smiles at us, sadly we quipped that we have seen him somewhere. He politely said 'I am Mathiyalakan'.

    பதிலளிநீக்கு
  9. உங்கள் அரசியல் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருபவன் நான். படிக்கும்போது அப்போதைய பழைய நினைவுகள் நினைவுக்கு வருகின்றன. நன்றி!

    பதிலளிநீக்கு
  10. எம்புட்டு வேலை நடந்திருக்கு, ரெண்டாவது தடவையும் படிச்சேன் அண்ணே

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.