என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, டிசம்பர் 14, 2012

16 சூப்பர் ஸ்டாரின் பேச்சும், சுப்ரீம் ஸ்டாரின் சங்கடமும்.....





நேற்று இரவு  ராயப்பேட்டை வழியாக ரூமுக்கு போகும்போது, YMCA மைதானத்தில் நடைபெற்ற ரஜினியின் பிறந்தநாள் விழாவில் ரஜினி பேசிய பேச்சை கேட்டேன். மிகவும் அற்புதமான பேச்சு. நட்பு, அரசியல், ஆன்மிகம்,ராணா என்று யாரிடமும் பகிராத பல புதிய விஷயங்களை பேசினார். பாபா படத்தில் பா.ம.க. செய்த பிரச்சினையையும் பேசினார். அரசியலுக்கு அப்பாற்பட்டவன்.ஆகவே நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் சொன்னார். நான் சிகரட்டை விட்டுவிட்டேன். நீங்களும் விட்டுவிடுங்கள் என்றும் ரசிகர்களுக்கு கட்டளையிட்டதுதான் அவர் பேச்சின் ஹைலைட். நீண்ட இடைவெளிக்கு பிறகு, பல வருடங்களுக்கு பிறகு ரஜினி கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சி இதுதான் என்று நினைக்கிறேன். ரசிகர்களிடம் நேரடியாக உரையாடுவதுபோல் இருந்தது அவர் பேச்சு. அதில் சில துளிகள்.......



முதலில் மைக்பிடித்த நடிகர் கருணாஸ் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்றார். அடுத்ததாக பேசிய ராதாரவியோ அண்ணா.தி.மு.க.,என்பதால் கழுவிய மீனில் நழுவிய மீன்போல் பேசினார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் பேசும்போது சரத்குமாரும், ராதாரவியும் அம்மா கட்சி. வாகை சந்திரசேகரோ அய்யா கட்சி எல்லாக்கட்சியும் இங்கே வந்திருக்கிறார்கள்.ஆகவே தலைவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்றார் சரத்குமார் ஒரு கட்சியின் தலைவர் என்பதை மறந்து.....

அவருக்கு பதில் சொல்வதுபோல் பேசிய சரத், தான் ஒரு இயக்கத்தின் தலைவர். அண்ணா.தி.மு.க.,வோடு கூட்டணிதான் வைத்திருக்கிறேன் என்று அழுத்தி சொன்னார்.

இறுதியாக மைக்பிடித்த ரஜினியோ.... லாரன்ஸ் சொன்னதுபோலவே சரத்குமார் ஒரு கட்சியின் தலைவர் என்பதை மறந்து, அண்ணா.தி.மு.க.,வை சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பது போலவே "சரத்குமாரும் ராதாரவியும் எனது பிறந்த நாளுக்கு செல்ல வேண்டுமென, இவர்கள் தாங்கள் சார்ந்துள்ள கட்சி தலைமையான ஜெயலலிதா மேடத்திடம் போய் ரஜினி பிறந்த நாள் விழாவிற்கு போய்வருகிறேன் என்றால், தாராளாமாக போங்க என்றுதான் சொல்லியிருப்பார் ஜெயலலிதா மேடம்.... அதுபோல் சந்திரசேகர் கலைஞர் சாரிடம் போய் நான் ரஜினி விழாவிற்கு போய்வருகிறேன் என்று கேட்டிருந்தால் அவரும் அனுமதி கொடுத்திருப்பார். இங்கு கோபாலபுரமும் வந்திருக்கு போயஸ் கார்டனும் வந்திருக்கு நான் பொதுவானவன் எனக்கு அரசியல் தேவையில்லை" என்றார். அதைத்தொடர்ந்து....

கடந்த, 1996ம் ஆண்டு, சட்டசபை பொதுத்தேர்தலின்போது, சில கருத்துக்களை நான் தெரிவித்தேன். அது தீயாக பற்றிக் கொண்டு, ஆட்சி மாற்றத்திற்கு உதவியது. தமிழகம் மற்றும் தேசிய தலைவர்கள் கட்டாயப்படுத்தியதால், நான் தேர்தல் தொடர்பான அறிக்கையை வெளியிட்டேன். அதன்பின், நான் அரசியலுக்கு வரவில்லை.  எனது படம் ஒன்றை குறித்து, அரசியல் தலைவர் ஒருவர்(ராமதாஸ்) விமர்சித்ததால், அதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. சினிமாவில் சிகரட் குடிக்க கூடாது என்று அவர்கள் சொன்ன விஷயம் சரிதான் ஆனால், சொன்ன விதம்தான் தவறு என்று சீண்டியதுபோல் பேசினார்.

(ஆனால், அந்த சம்பவத்திற்கு பதில் சொல்லாமல் இருந்தால்), என்னை கோழை என்று நினைத்து விடுவார்கள். நான் என்றும் கோழையாக இருக்க விரும்பவில்லை. அதனால், எதிர்கருத்தை பதிவு செய்தேன். இதன் பின், எந்த அரசியல் நடவடிக்கைகளிலும், நான் பங்கேற்கவில்லை. காமராஜர் போன்ற ஒரு தலைவர் தோற்கடிக்கப்பட்டார் என்றால், அதற்காக அவர், நேர்மையற்றவர் என சொல்ல முடியாது. அவருக்கு நேரம் கூடிவரவில்லை. அதனால், தோற்கடிக்கப்பட்டார். மேலும்,

அரசியலை நடத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. அரசியலுக்கு வருவேன் என பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதற்கு நான் தயாராக இல்லை. அரசியல் என்பது பெரிய கடல்; அது குறித்து, இப்போது என்னால், எதுவும் கூற முடியாது.பொதுவாக, அரசியல் கட்சி நடத்துபவர்கள் யாரும் நிம்மதியாக இல்லை. அரசியல் கட்சி தலைவர்களை வாழ வைப்பதும், வீழ்த்துவதும் அவர்களது தொண்டர்கள்தான். எனது ரசிகர்கள் என்னை வாழவைத்துக் கொண்டு உள்ளார்கள். 

என்னைப் பொறுத்தவரை, எனது ரசிகர்கள் நிம்மதியாக வாழ வேண்டும்; அவர்களது வீட்டை, அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். அதன்பின்தான், மற்றவையெல்லாம்.நான் எல்லா கட்சிக்கும் பொதுவானவன்.


 நாட்டின் தலையெழுத்து என்று ஒன்று உள்ளது. தெய்வசக்திதான் முக்கியமான முடிவுகளை நம் வாழ்க்கையில் நிர்ணயிக்கிறது.  இதற்கு மேல், நான் அரசியல் பேச விரும்பவில்லை. எனது ரசிகர்கள், நலமுடன் இருக்கவே, நான் விரும்புகிறேன். நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது, எனக்காக பிரார்த்தனை செய்த உள்ளங்கள்தான், என் மறுவாழ்வுக்கு காரணம். அவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்வேன் எனத் தெரியவில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய ரஜினி...."மது, சிகரெட் பழக்கத்தை விட்டுவிடுங்கள். இதனால், எனது வாழ்க்கை பாதிக்கப்பட்டு, இப்போது மறுபிறவி எடுத்துள்ளேன். வாழ்க்கையில் சந்தித்த, கெட்ட நண்பர்கள் மூலம், குடிப்பழக்கத்திற்கு அடிமையானேன். என் திருமணத்திற்கு பிறகு, குடியை குறைத்துக் கொண்டேன்.ஆனால், முழுமையாக விடவில்லை. அதே போல், சிகரெட் பழக்கமும், என்னை விட்டு, அகலவில்லை. 

கடந்த ஆண்டு, எனது நுரையீரல் பாதிக்கப்பட்டு, சுயநினைவை இழந்துவிட்டேன். இதற்கு சிகிச்சையளிக்கும் நேரத்தில், எனது சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. இரண்டிற்கும் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றேன். இதற்காக, அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளினால், எனது உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு விட்டது.

இந்த எதிர்விளைவில் இருந்து, கடந்த இரு மாதங்களாகத்தான், விடுபட்டுள்ளேன். எனவே, ரசிகர்கள் மது மற்றும் சிகரெட் பழக்கத்தை தயவு செய்து விட்டுவிடுங்கள் ’’என வேண்டுகோளும்  விடுத்தார்.

நிச்சயம் லாரன்ஸ் பேச்சும், ரஜினியின் பேச்சும் சரத்குமாரை சங்கடப்படுத்தியிருக்கும் என்றால் அது மிகையில்லை.




Post Comment

இதையும் படிக்கலாமே:


16 கருத்துகள்:

  1. அன்பின் கஸாலி - நேர்முக வர்ணனை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  2. ஹி ஹி...சரத்குமாரை அப்படி சொல்லாமல் இருந்தால்தான் சங்கடப்பட்டு இருப்பார்...

    பதிலளிநீக்கு
  3. ஹா ஹா லாரன்ஸ் சரியா தான் பேசியிருக்காரு ..

    பதிலளிநீக்கு
  4. அருமை கஸாலி.. வாழ்த்துக்கள்...

    கண் கெட்ட பின்னே சூரிய உதயம் எந்த பக்கம் ஆனால் எனக்கென்ன போடி...
    இந்த பாட்டு தான் ரஜினி பேச்ச கேட்டதும் நினைவு வந்துச்சு..

    தன் வாழ்நாளில் முக்காவாசி நாள் இளைஞர்களை கெடுக்கும் வண்ணம் சிகரெட், மது எல்லாத்தையும் குடிக்க மறைமுக காரணமா இருந்துட்டு.. இப்ப விட்டுடனுமாம்....

    போங்கப்பா.. மைக் கெடச்சா எதையாவது பேச வேண்டியது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விட்டாலும் குறை சொல்லுன்க்க ,, பிடித்தாலும் குறை சொல்லுன்க்க ... ஏன் பாஸ் இப்படி ?

      நீக்கு
    2. / விட்டாலும் குறை சொல்லுன்க்க ,, பிடித்தாலும் குறை சொல்லுன்க்க ... ஏன் பாஸ் இப்படி ?

      //

      :)

      நீக்கு
    3. பொம்பளைங்க எப்படி இருந்க்க வேண்டும் என்று எல்லா படத்திலையும் அட்வைஸ் பண்ணின ரஜினி தன்னோட பொண்ணுகளுக்கு அட்வைஸ் பண்ண மறந்திட்டாரே?

      நீக்கு
    4. திரு சிராஜ் உங்கள் கருத்து தவறு கவியரசர் கண்ணதாசன் கருத்தை கேளுங்கள்,இதற்கான பதில் ”சாக்கடை நாத்தமானது, அதில் இறங்காதே. மது பழக்கமும் அது பேல குடிக்காதே” இதை கூறுவதால் நீயே குடி காரன் நீ கூறலாமா? என கேட்காதே, சாக்கடையின் நாற்றம் அதில் விழுந்த எனக்குதான் தெரியும். குடிக்காதே என சொல்ல என்னை தவிற தகுதியானவன் யாருமில்லை” பட்டதெலலாம் பாடினாரே பட்டிந்த்தார், அது போல் தான் திரு ரஜினி சொல்வதும் . நட்புடன் நக்கீரன்



      நீக்கு
  5. அருமையான பகிர்வு! ரஜினியின் அறிவுரையை அவரது ரசிகர்கள் கேட்க வேண்டுமே!

    பதிலளிநீக்கு
  6. //அரசியலுக்கு வருவேன் என பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதற்கு நான் தயாராக இல்லை.//
    சொல்லாதது..
    ஆனால் வரமாட்டேன் என்று சொல்லமாட்டேன். ஒவ்வொரு படம் வரும்போதும் நான் அரசியலுக்கு வருவது போல் தோற்றத்தை பலர் கொடுக்கும்போது நான் மறுக்க மாட்டேன்.

    பதிலளிநீக்கு
  7. ரொம்ப வெளிப்படையான பேச்சு..நன்றி கஸாலி.

    பதிலளிநீக்கு
  8. அப்போ பிரியாணி போடுவது பற்றி ஒண்ணுமே கதைக்கலையா? சோ சாட்.'

    பதிலளிநீக்கு
  9. "என்னைப் பொறுத்தவரை, எனது ரசிகர்கள் நிம்மதியாக வாழ வேண்டும்; அவர்களது வீட்டை, அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்."

    அதுக்கு நீங்க செய்ய வேண்டியது அஜித் மாதிரி உங்க ரசிகர் மன்றத்தை கலைக்க வேண்டும். அது நடந்தாலே எல்லாம் சரியாகும்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.