என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், ஆகஸ்ட் 24, 2010

2 ராஜினாமா

(குறிப்பு: இந்த சிறுகதை கடந்த 2009 வருடம்  விகடனில் வெளிவந்த என்னுடைய படைப்புகளில் ஓன்று.)

'ந்தசாமி எம்.எல்.ஏ., பதவியிலிருந்து விலகல். கட்சியிலிருந்தும் விலகினார்' என்று டி.வி-யில் பிளாஷ் நியூஸ் ஓடியது. தொண்டர்கள், மக்கள், பத்திரிகையாளர்கள் என கந்தசாமியின் வீடே நிரம்பி வழிந்தது.

கந்தசாமி வெளியில் வந்தார். அவரை நிருபர்கள் மொய்த்தனர்.

"ஏன் சார் திடீரென்று இந்த ராஜினாமா?"

"நான் கடந்த மூன்று வருடமா எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருக்கேன். ஆனால், என்னை நம்பிவாக்களித்த மக்களுக்கு என்னால் எதுவுமே செய்ய முடியல. மக்களுக்கு பயன்படாத இந்த பதவி இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன என்று முடிவு செய்து ராஜினாமா செய்து விட்டேன்."

"கட்சியிலிருந்தும் விலகியிருக்கீங்களே?"

"நான் என் முடிவை என் கட்சி தலைமையிடம் சொன்னபோது என் தலைமை அதை ரசிக்கவில்லை. மாறாக, நான் ஆளுங்கட்சியிடம் விலை போய்விட்டதாக என் மீது குற்றம் சுமத்தியது. இத்தனை வருடம் இந்த கட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் விசுவாசமாக உழைத்த என்னை, துரோகி என்ற பட்டம் கொடுத்து களங்கப்படுத்தி விட்டார்களே என்ற ஆதங்கத்தில் கனத்த இதயத்துடன் அந்த கட்சியிலிருந்து விலகிவிட்டேன்."

"உங்கள் அடுத்த முடிவு என்ன?"

"என் ஆதரவாளர்களிடம் கலந்து பேசி விரைவில் நல்ல முடிவை அறிவிக்கிறேன்."

"ஆளுங்கட்சியில் இணைவீர்களா?"

"எதுவும் நடக்கலாம். போய் வாருங்கள்."

வீட்டுக்கு வெளியில் நின்ற மக்கள், 'செய்யாதே செய்யாதே ராஜினாமா செய்யாதே. வாபஸ் வாங்கு வாபஸ் வாங்கு ராஜினாமாவை வாபஸ் வாங்கு' என்று கோஷமிட்டனர்.

அவர்களிடம் போன கந்தசாமி, "தயவு செய்து என்னை புரிஞ்சுக்கங்க. நான் ராஜினாமா செய்தது உங்களுக்காகத்தான்.
உங்களுக்கு நல்லது செய்ய முடியலைங்கிற போது எனக்கு எதுக்கு பதவி? சீக்கிரம் நல்ல முடிவை சொல்றேன். நான் என்ன முடிவெடுத்தாலும் நீங்க அதுக்கு கட்டுப்படுவீங்கள்ள?"

"கட்டுப்படுவோம், கட்டுப்படுவோம்" - கூட்டம் தலையாட்டியது.

"இது போதும் எனக்கு. இப்ப நீங்க வீட்டுக்கு போங்க."

கூட்டம் கலைந்தது.

கந்தசாமி வீட்டினுள் நுழைந்தார். அங்கே அவர் மனைவி, மகன் ஆகியோர் இருந்தனர்.

"ஏன்ப்பா இந்த முடிவு? அதுவும் எங்ககிட்ட கூட சொல்லாம? நீங்க ராஜினாமா பண்ணியிருக்கக் கூடாதுப்பா. யாராவது பொன் முட்டையிடும் வாத்தை அறுத்து பார்க்க நினைப்பாங்களா?"

"டே உனக்கு இந்த அரசியல் புரியாது. எம்.எல்.ஏ. பதவிங்கறது தங்க முட்டையிடற வாத்துங்கறதை நான் ஒத்துக்கறேன். ஆனா, மந்திரி பதவிங்கறது முட்டையிடுற அந்த வாத்தே தங்கம் என்பது மாதிரி. நான் தங்க முட்டையா இருக்க ஆசைப்படல. தங்க வாத்தா இருக்க ஆசைபடறேன்."

"என்னப்பா சொல்லறீங்க?"

"நான் ஏற்கனவே ஆளுங்கட்சியிடம் பேசி முடிச்சுட்டேன். நான் ராஜினாமா பண்ணிட்டு ஆளுங்கட்சியில் போயி சேர்ந்தா... இங்கே நடக்குற இடைத்தேர்தலில் மறுபடியும் எனக்கு சீட் தந்து, ஜெயிச்சதும் மந்திரி பதவி தர்றதா வாக்கு தந்துட்டாங்க"

"மக்களுக்கு எதுவும் செய்ய முடியாததால ராஜினாமா செஞ்சதா சொன்னீங்களே?"

"அது ஒரு நாடகம். இப்படியெல்லாம் சொல்லிட்டு ராஜினாமா பண்ணினால்தான், மக்களுக்கு இவன் ரொம்ப நல்லவன்னு என் மேல ஒரு நம்பிக்கை வரும். இவன் நமக்காக ராஜினாமா செய்தவங்கற அனுதாபமும் வரும்.மறுபடி தேர்தலில் நிற்கும் போது அந்த நம்பிக்கையும் அனுதாபமும் வாக்குகளா மாறி என்னை ஜெயிக்க வச்சுடும். இது சைக்காலஜி மாதிரி எலக்சனாலஜி. எப்படி நம்ம ஐடியா?"

"அப்பா, நீங்க மந்திரியா மட்டுமல்ல... விட்டா முதலமைச்சராக்கூட ஆகிருவீங்க. சரி, இவ்வளவு நாளா விமர்சனம் பண்ணிட்டு இப்பப்போயி ஆளுங்கட்சியில போயி சேர்ந்தா மக்கள் அதை ஒத்துக்குவாங்களா?"

"அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை. நிரந்தர நண்பனுமில்லை. நான் என் தாய்க் கழகத்தில் இணைவது காலத்தின் கட்டாயம்ன்னு ஒரு அறிக்கை விட்டா சரியாப்போச்சு. எங்க மாதிரி அரசியல்வாதிகளுக்காகத்தானே இந்த ரெண்டு வார்த்தையும் அகராதியில் இடம்பெற்றிருக்கு. சரி நேரமாச்சு. நான் போயி சி.எம்-மை பார்ர்க்கணும். கிளம்பறேன்".


Post Comment

இதையும் படிக்கலாமே:


2 கருத்துகள்:

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.