என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, நவம்பர் 19, 2010

10 அதென்ன மிசா அல்லது எமர்ஜென்சி-பாகம்-3

"நெருக்கடி நிலை"யின் போது சிறையில் அடைக்கப்பட்ட ஜெயப்பிரகாசரும், மற்ற தலைவர்களும் பாராளுமன்றதேர்தலில் இந்திரா காந்தியை தோற்கடிக்க என்ன செய்யலாம் என்று ஆலோசித்தனர்.

"நெருக்கடி நிலை" கொண்டு வந்ததால் இந்திரா காந்திக்கு கெட்ட பெயர். எனவே, எதிர்க்கட்சிகளின் ஓட்டுகள் சிதறாமல் இருந்தால் இந்திராவை சுலபமாகத் தோற்கடிக்கலாம்" என்று ஜெயப்பிரகாசர் யோசனை தெரிவித்தார். அது மட்டுமின்றி எல்லா கட்சித் தலைவர்களையும் அழைத்து, "ஒற்றுமையாக இருங்கள். ஒரே கட்சியாக செயல்பட்டு, இந்திரா காந்தியை தோற்கடியுங்கள்" என்றார். அதன்படி ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம், சோசலிஸ்டு, லோக்தளம் ஆகிய நான்கு பெரிய கட்சிகளும் "ஜனதா கட்சி" என்ற பெயரில் ஒன்றாக இணைந்தன. வேற்றுமைகளை மறந்து ஒரே சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தன.

இந்த சமயத்தில், எதிர்பாராத திருப்பமாக இ.காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜெகஜீவன்ராம் (மத்திய விவசாய மந்திரி) விலகினார். தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெரிய தலைவராக விளங்கிய ஜெகஜீவன்ராம் அதுவரை இந்திரா காந்தியின் வலது கரமாக விளங்கியவர். அவர் இ.காங்கிரசைவிட்டு விலகியதோடு மட்டுமின்றி, இந்திரா காந்தியை தாக்கியும், நெருக்கடி நிலை கொடுமைகளைக் கண்டித்தும் அறிக்கை விடுத்தார். "ஜனநாயக காங்கிரஸ்" என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி ஜனதாவுடன் கூட்டு சேர்ந்தார். ஜெகஜீவன்ராமை பின்பற்றி மத்திய மந்திரிகள் எச்.என். பகுகுணா, நந்தினி சத்பதி (ஒரிசா முன்னாள் முதல்_மந்திரி), கே.ஆர்.கணேஷ், டி.என்.திவாரி ஆகியோரும் இ.காங்கிரசை விட்டு விலகினர். இவர்கள் ஜனதா கட்சியில் சேர்ந்தார்கள். ஜெகஜீவன்ராமும், மற்றவர்களும் இ.காங்கிரசை விட்டு விலகி ஜனதாவுடன் சேர்ந்து கொண்டது, இந்திராவுக்கு அதிர்ச்சி அளித்தது.

தேர்தலில் இ.காங்கிரஸ் வெற்றி பெறுவது சந்தேகம் என்பதைப் புரிந்து கொண்ட சஞ்சய் காந்தி, "தேர்தலை ரத்து செய்து விடுங்கள்" என்று இந்திரா காந்தியிடம் வற்புறுத்தினார். ஆனால், இந்திரா காந்தி அதற்கு சம்மதிக்கவில்லை. "நெருக்கடி நிலையினால் ஏற்கனவே நமக்கு கெட்ட பெயர். அப்படி இருக்க தேர்தலை ரத்து செய்தால், அது நமக்கு தீராத களங்கத்தை ஏற்படுத்தும். எனவே, தேர்தலை ரத்து செய்யமாட்டேன்" என்று கூறிவிட்டார். தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கும்போது, 11_2_1977_ல் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது திடீரென்று காலமானார். (தேர்தலை தள்ளிப்போடும்படி இந்திரா காந்தி வற்புறுத்தியதாகவும், அந்த அதிர்ச்சியால் ஜனாதிபதி மரணம் அடைந்ததாகவும் பின்னர் சிலர் குற்றம் சாட்டினர். ஆனால் அது உண்மை அல்ல என்று இந்திரா மறுத்தார்.) பக்ருதீன் அலி அகமதுவுக்கு பதிலாக துணை ஜனாதிபதி ஜாட்டி, தற்காலிக ஜனாதிபதியாகப் பொறுப் பேற்றார்.

இதற்கிடையே நேருவின் தங்கையும், பல நாடுகளில் இந்திய தூதராகப் பணியாற்றியவருமான விஜயலட்சுமி பண்டிட், இந்திரா காந்தியைத் தாக்கி அறிக்கை விடுத்தார். "நெருக்கடி நிலை பிரகடனம் செய்து தலைவர்களை சிறையில் அடைத்ததன் மூலம் இந்தியா இதுவரை கடைப்பிடித்து வந்த ஜனநாயகத்துக்கு களங்கம் உண்டாக்கிவிட்டார் இந்திரா காந்தி. இந்தியாவில் மீண்டும் ஜனநாயகம் தழைக்க வேண்டுமானால் ஜனதா கூட்டணி வெற்றி பெறவேண்டும்" என்று அறிக்கை விடுத்தார். ஜனதா வெற்றி பெற்றால் தனக்கு ஜனாதிபதி பதவி கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்ததாக பின்னர் பத்திரிகைகள் எழுதின.

மார்ச் 14_ந்தேதி அமேதி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த சஞ்சய் காந்தியை சுட்டுக்கொல்ல முயற்சி நடந்தது. ஒரு காரில் வந்த மர்ம மனிதர்கள், சஞ்சய் காந்தியின் காரை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். அந்த சமயத்தில் காரின் பின்புறம் அமர்ந்திருந்த தன் உதவியாளரை நோக்கித் திரும்பி பேசிக்கொண்டிருந்ததால், சஞ்சய் காந்தி உயிர் தப்பினார். துப்பாக்கியால் சுட்டுவிட்டு, மர்ம கும்பல் தப்பிச்சென்று விட்டது. இதுபற்றி சஞ்சய் காந்தி போலீசில் புகார் செய்தார். ஆனால் துப்பாக்கியால் சுட்டவர்கள் யார் என்பது கடைசிவரை கண்டு பிடிக்கப்படவில்லை.

சஞ்சய் காந்தி தேர்தல் பிரசாரம் செய்யப்போன சில இடங்களில் அவருக்கு எதிராக விதவைப் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். "கட்டாய கருத்தடையால் கணவரை இழந்தோம். நீ குற்றவாளி!" என்று அவர்கள் குரல் எழுப்பினர். சஞ்சய் காந்தி தான் பேசிய கூட்டங்களில் கட்டாய கருத்தடை திட்டத்தை நியாயப்படுத்திப் பேசினார். அதனால் அவருக்கு எதிர்ப்பு மேலும் அதிகமாகியது.

உத்தரபிரதேசத்தில் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தியும், அமேதி தொகுதியில் சஞ்சய் காந்தியும் போட்டியிட்டனர். இரண்டும் அடுத்தடுத்து இருந்தன. "காங்கிரஸ் கோட்டைகள்" என்று வர்ணிக்கப்பட்ட தொகுதிகள் இவை. அங்கு இ.காங்கிரசுக்கு எதிர்ப்பு அதிகமாகி வருவது கண்டு, இந்திரா காந்தி கவலை அடைந்தார். ஆயினும் குறுகிய ஓட்டு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற முடியும் என்று அவர் நம்பினார். பாராளுமன்றத்திலும் சொற்ப மெஜாரிட்டியுடன் இ.காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று, உளவுத்துறை மூலம் அவருக்கு வந்த தகவல்கள் கூறின. ஆனால்...
(இந்திய அரசியலில் ஏற்பட்ட எதிர்பாரா திருப்பம் வரும் திங்கள் அன்று. அதுவரை பொறுத்திருங்கள்
 அதென்ன எமெர்ஜென்சி அல்லது மிசா
பாகம்-1
பாகம்- 2

நண்பர்களே.....சில பத்திரிகைகளில் நான் படித்ததை தொகுத்து, இடையிடையே நான் கேள்விப்பட்ட விஷயங்களையும் சேர்த்து இந்த கட்டுரையை உங்களோடு பகிர்ந்து வருகிறேன்.நான் படித்த ஒரு விஷயம் இந்த தலைமுறையினர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த சிறு முயற்சியை  எடுத்துள்ளேன்.  தயவுசெய்து காப்பிரைட் பிரச்சினையை எழுப்பவேண்டாம். 
நிறைய நண்பர்கள் இந்த கட்டுரையை நான் எழுதுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.இது என் எழுத்து நடையே அல்ல....இந்த கட்டுரைக்கு நான் ஒரு தொகுப்பாளர் மட்டுமே....

Post Comment

இதையும் படிக்கலாமே:


10 கருத்துகள்:

  1. அருமை..தொடரட்டும் உங்கள் பணி...

    பதிலளிநீக்கு
  2. நன்றிங்க ரஹீம் கஸாலி. அறிய தகவல்கள் தொக்குக்கப்பட்டு ஒரே இடத்தில். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  3. நல்லா போகுதுங்க....தொடருங்கள்... திங்கள் வருகிறேன்

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா19 நவ., 2010, 3:01:00 PM

    அருமையான தொகுப்பு சார் .விருவிருப்பா இருக்கு. அந்த காலத்துக்கே போன மாறி ஒரு பீலிங்

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா19 நவ., 2010, 4:45:00 PM

    [ma]nanraga irunthathu[/ma]

    பதிலளிநீக்கு
  6. நண்பா அருமை .தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  7. மிகவும் சிறப்பான தொகுப்பு..
    நல்லா போகுது. தொரடருங்கள்.

    பதிலளிநீக்கு
  8. அருமை... தங்கள் கடைசி 6 ஆக்கத்திற்கும் இன்று தான் வாக்கிட முடிந்தது...

    பதிலளிநீக்கு
  9. நல்ல விறுவிறுப்பு!

    தொடர்ந்து படிக்க வைக்க தூண்டுது! வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. தகவல்கள் சுவையானதும் அறியாததும்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.