என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், நவம்பர் 16, 2010

12 அதென்ன மிசா அல்லது எமர்ஜென்சி?


வங்காளதேச விடுதலையைத் தொடர்ந்து புகழேணியின் உச்சியில் இருந்த இந்திராவுக்கு எதிர்பாராத சோதனை ஏற்பட்டது. 1971 தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என்று அவருடன் போட்டியிட்டு தோற்ற ராஜ்நாராயண் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
ராஜ்நாராயண் "அரசியல் கோமாளி" என்று வர்ணிக்கப்பட்டவர். தேர்தலில் வெற்றி பெற இந்திரா காந்தி ஊழல் புரிந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 1975 ஜுன் 12_ந்தேதி அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி ஜெகன்மோகன் சின்கா தீர்ப்புக் கூறினார். "இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது" என்பதே அந்தத் தீர்ப்பு.
 இந்தியாவை மட்டுமல்ல அகில உலகத்தையும் இந்தத் தீர்ப்பு அதிர்ச்சி அடையச் செய்தது.
 
தீர்ப்பில் நீதிபதி கூறியிருந்ததாவது:_ "மத்திய அரசின் கெஜட் பதவி பெற்ற அதிகாரியான யஷ்பால் கபூரை, இந்திரா காந்தி தன் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். யஷ்பால் கபூர் முன்னதாகவே ராஜினாமா கடிதம் கொடுத்தபோதிலும் ஜனவரி 25_ந்தேதிதான் ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்தத் தேதி வரை இந்திரா காந்தியின் தேர்தல் பணிகளை யஷ்பால் கபூர் கவனித்தது சட்ட விரோதம். இந்திரா காந்தியின் தேர்தல் கூட்டங்களுக்கு உத்தரபிரதேச அரசு ஏற்பாடு செய்துள்ளது. போலீசாரும் பயன்படுத்தப் பட்டுள்ளனர். இத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளதால் இந்திரா காந்தி பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. " இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.
இந்திரா மனு தீர்ப்புக் கூறப்பட்ட அரை மணி நேரத்திற்கெல்லாம், "தீர்ப்பை நிறுத்தி வைக்கவேண்டும்" என்று கோரி இந்திரா காந்தி சார்பில் நீதிபதி சின்கா முன்னிலையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டு தீர்ப்பை அமுல் நடத்துவது இருபது நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்றும், இந்த இருபது நாட்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.
தேர்தல் செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளதால் இந்திரா காந்தி உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று சர்வோதய தலைவர் ஜெயப்பிரகாசர், ஸ்தாபன காங்கிரஸ் தலைவரும் முன்னாள் துணைப்பிரதமருமான மொரார்ஜி தேசாய், சோசலிஸ்டு கட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் பலர் அறிக்கை விடுத்தனர்.

இந்திரா காந்தி மந்திரிசபையில் மூத்த மந்திரிகளாக இருந்த ஜெகஜீவன்ராம், சவான், உமாசங்கர், தீட்சித், பிரமானந்த ரெட்டி, சங்கர் தயாள் சர்மா, இ.காங்கிரஸ் கட்சித் தலைவர் பரூவா ஆகியோர், "அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இந்திரா காந்தி அப்பீல் செய்ய இருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புதான் இறுதியானது. இந்திரா காந்தி தலைமையில் நாங்கள் நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டிருக்கிறோம். நாட்டின் ஒற்றுமைக்கும், ஸ்திரத் தன்மைக்கும் அவர் தலைமை அவசியமானது" என்று அறிக்கை வெளியிட்டனர்.
அப்போதைய ஜனசங்கத் தலைவர் வாஜ்பாய், காஷ்மீரில் தங்கியிருந்த ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவைச் சந்தித்து, "கோர்ட்டு தீர்ப்புக்குத் தலைவணங்கி இந்திரா பதவி விலக வேண்டும்" என்று வற்புறுத்தினார். சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரியும் இந்திரா காந்தி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பிரபல வழக்கறிஞர் பல்கிவாலா தாக்கல் செய்தார். மனுவை ஜுன் 23_ந்தேதி நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் விசாரித்து, மறுநாள் தீர்ப்புக் கூறினார்.
தீர்ப்பு விவரம் வருமாறு:_ "அலகாபாத் ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அப்பீல் மனு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. இறுதித் தீர்ப்பு கூறப்படும் வரை அலகாபாத் கோர்ட்டு தீர்ப்பின் அமுலை சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு நிறுத்தி வைக்கிறோம். அதாவது, இந்திரா காந்தி பாராளுமன்ற உறுப்பினராகச் செயல்படலாம். அவர் பிரதமராக நீடிப்பதற்கு தடை ஏதும் இல்லை. ஆனால் பாராளுமன்றத்தில் சட்டங்கள் தீர்மானங்கள் மீது வாக்கெடுப்பு நடைபெறும் போது, ஓட்டுப்போட அவருக்கு உரிமை இல்லை." இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்காலத் தடையையே சுப்ரீம் கோர்ட்டு வழங்கியிருப்பதால், இந்திரா காந்தி ராஜினாமா செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் மீண்டும் வற்புறுத்தினார்கள்.

இந்திரா காந்தி மத்திய மந்திரிகளையும், இ.காங்கிரசைச் சேர்ந்த முதல்_மந்திரிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தினார். 

"நீங்கள் ராஜினாமா செய்தால் இந்தியா முழுவதும் குழப்பங்கள் ஏற்படும். இந்திய ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து ஏற்படும். எனவே பொறுமையுடன் இருங்கள். நான் இந்திய அரசியல் சட்டத்தை ஆராய்ந்து அடுத்து என்ன செய்யலாம் என்று கூறுகிறேன்" என்று கூறினார் ரே. அவர் அரசியல் சட்டத்தில் நிபுணர். மீண்டும் அரசியல் சட்டத்தை நுட்பமாக ஆராய்ந்தார். பின்னர் இந்திரா காந்தியை சந்தித்து, "நீங்கள் பதவியில் நீடிக்கலாம் என்று கோர்ட்டு அறிவித்து இருக்கிறது. எனவே ராஜினாமா செய்ய அவசியம் இல்லை" என்று தெரிவித்தார். அப்போது, உளவுத்துறையிடம் இருந்து தனக்கு வந்துள்ள தகவல்களை அவரிடம் இந்திரா கொடுத்தார்.

இந்திரா காந்திக்கு எதிராக ராணுவத்தினரும், போலீசாரும் புரட்சி நடத்தவேண்டும் என்று ஜெயப்பிரகாஷ் நாராயண் பேசியுள்ளார் என்றும், இந்திரா காந்தியை வீட்டை விட்டு வெளியேற விடாதபடி "முற்றுகை போராட்டம்" நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. "நீங்கள் பதவி விலகினாலும் உங்கள் ஆதரவாளர்கள் கிளர்ச்சி செய்வார்கள். சும்மா இருந்தாலும் எதிர்க்கட்சிகள் கலவரம் செய்வார்கள். உள்நாட்டுக் கலவரம் ஏற்படாமல் தடுக்க இந்தியா முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்வதுதான் ஒரே வழி" என்றார் ரே.
நீண்ட நேரம் இந்திரா காந்தி ஆலோசனை நடத்தினார்.இறுதியில், "ராஜினாமா செய்வதில்லை" என்று தீர்மானித்தார். (ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள், "இந்திரா காந்தியை பதவியை விட்டு விரட்டும் வரை ஓயப்போவதில்லை" என்று அறிவித்தனர். அவரை ராஜினாமா செய்யும்படி வற்புறுத்தி ஜுன் 29_ந்தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தத் தீர்மானித்தனர். போராட்டத்தை நடத்துவதற்காக, மொரார்ஜி தேசாய் தலைமையில் போராட்டக்குழு அமைக்கப்பட்டது.)
பிறகு ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவை சந்தித்தார். உளவுத்துறையிடம் இருந்து வந்துள்ள தகவல்களை ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

"உள்நாட்டுக் கலவரம் வெடிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே நெருக்கடி நிலை பிரகடனம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என்று கூறினார். ஜனாதிபதி சில விளக்கங்கள் கேட்டார். பிறகு, "நெருக்கடி நிலை பிரகடனத்தைத் தயாரித்து அனுப்புங்கள். கையெழுத்திடுகிறேன்" என்று தெரிவித்தார். இந்தக் கால கட்டத்தில் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி அரசியலில் பங்கு கொண்டிருந்தார்.

தாயாருக்கு அவர் ஆலோசனைகள் கூறுவது வழக்கம். நெருக்கடி நிலைமை பிரகடனம் ஆகப்போகிறது என்று தெரிந்து கொண்டதும் அவர் தாயாரை சந்தித்தார். "நெருக்கடி நிலை கொண்டு வந்தால் மட்டும் போதாது. எதிர்க்கட்சி தலைவர்கள் வெளியே இருந்தால் முன்பைவிட அதிக தீவிரமாக கலவரத்தில் ஈடுபடுவார்கள். எனவே இரவோடு இரவாக அவர்களையெல்லாம் கைது செய்து சிறையில் அடைத்துவிடவேண்டும். நெருக்கடி நிலை'யில் எதிர்க்கட்சி தலைவர்களைக் காரணம் காட்டாமல் கைது செய்யலாம். அத்துடன் பத்திரிகைகளுக்கு தணிக்கை ("சென்சார்") முறையை கொண்டுவரவேண்டும்" என்றார்.

இந்திரா காந்தி இதற்குத் தயங்கினார். நீண்ட ஆலோசனைக்கு பிறகு தலைவர்களை கைது செய்யவும், பத்திரிகைத் தணிக்கைக்கும் சம்மதித்தார். 1975 ஜுலை 25_ந்தேதி நள்ளிரவுக்குப்பின் (26_ந்தேதி அதிகாலை) "நெருக்கடி நிலை" பிரகடனம் செய்யப்பட்டது. முதுபெரும் தலைவர் ஜெயப்பிரகாசரை, நள்ளிரவில் போலீசார் தட்டி எழுப்பி கைது செய்தனர். "விநாசகாலே விபரீத புத்தி" ("கெட்ட காலம் வந்துவிட்டால் விபரீத புத்திதான் வரும்") என்று கூறியபடி அவர் போலீசாருடன் சென்றார். மொரார்ஜி தேசாய், வாஜ்பாய், ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்பட இந்தியா முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோதே, பத்திரிகைத் தணிக்கையும் அமுலுக்கு வந்துவிட்டதால், தலைவர்கள் கைது பற்றிய விவரங்கள் பத்திரிகைகளில் இடம் பெறவில்லை. அதாவது பத்திரிகையில் அந்தச் செய்தியைப் பிரசுரிக்க தணிக்கை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

டெல்லியில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளில் நெருக்கடி நிலை பிரகடனம் பற்றியோ, தலைவர்கள் கைது பற்றியோ செய்தி இடம் பெறக்கூடாது என்று சஞ்சய் காந்தி நினைத்தார். அதற்காக அவர் ஒரு குறுக்கு வழியைக் கையாண்டார். பத்திரிகைகள் அச்சாகத் தொடங்குவதற்கு முன், பத்திரிகை ஆபீசுகளுக்கு மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் அன்று காலை நாளிதழ்கள் வெளிவரவில்லை. ஜெனரேட்டர் வசதியுள்ள ஒரு சில பத்திரிகைகள் மட்டும் வெளிவந்தன. நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது மந்திரிகளுக்கு கூட தெரியாது! காலை 6 மணிக்கு மந்திரி சபை கூட்டம் இருப்பதாக காலை 5 மணிக்கு மந்திரிகளின் வீடுகளுக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி 6 மணிக்கு மந்திரிகள் கூடினார்கள். நெருக்கடி நிலை பிரகடனம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது பற்றி இந்திரா விளக்கினார்.

"நெருக்கடி நிலையை காலதாமதமின்றி உடனடியாக பிரகடனம் செய்யவேண்டியிருந்ததால், மந்திரிசபை கூட்டத்தை முன்னதாகக் கூட்டி ஒப்புதல் பெற முடியவில்லை" என்று கூறிய இந்திரா, நள்ளிரவில் தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவரத்தையும் தெரிவித்தார். சில மந்திரிகளுக்கு இது அதிர்ச்சி அளித்தது என்றாலும் தங்கள் கருத்தை வெளியிட தைரியம் இன்றி மவுனமாக இருந்தனர். பின்னர், நெருக்கடி நிலை பிரகடனத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டதாக அறிவிப்பு வெளியானது.

நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்யப்பட்டது குறித்து, ரேடியோவில் இந்திரா காந்தி பேசினார். அவர் கூறியதாவது:-

"மக்கள் நலனுக்காக நான் சில முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியது முதலே, அதற்கெதிராக சதி உருவாகி வந்தது. ஜனநாயகம் செயல்படுவதைச் சீர்குலைக்க முயற்சி செய்யப்படுகிறது. கலகம் செய்யும்படி நமது ராணுவத்தையும், போலீசாரையும் தூண்டிவிடும் அளவுக்கு சில நபர்கள் சென்றுள்ளனர். நெருக்கடி நிலைப் பிரகடனம் சட்டத்தை மதிக்கும் பிரஜைகளின் உரிமைகளை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று உறுதியளிக்கிறேன். கூடிய விரைவில் நெருக்கடி நிலையை ரத்து செய்யும் அளவுக்கு உள்நாட்டு நிலைமையில் அபிவிருத்தி ஏற்படும் என்று நம்புகிறேன்." இவ்வாறு இந்திரா காந்தி கூறினார்.
அதன்பிறகு மக்களிடம் நல்லபெயரெடுக்க இந்திரா கொண்டுவந்த இருபது அம்சத்திட்டம், தி.மு.க-ஆட்சி டிஸ்மிஸ் பற்றி விரைவில்......  
நண்பர்களே.....சில பத்திரிகைகளில் நான் படித்ததை தொகுத்து, இடையிடையே நான் கேள்விப்பட்ட விஷயங்களையும் சேர்த்து இந்த கட்டுரையை  உங்களோடு பகிர்ந்து வருகிறேன்.நான் படித்த ஒரு விஷயம் இந்த தலைமுறையினர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த சிறு முயற்சியை  எடுத்துள்ளேன்.  தயவுசெய்து காப்பிரைட் பிரச்சினையை எழுப்பவேண்டாம். 
நிறைய நண்பர்கள் இந்த கட்டுரையை நான் எழுதுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.இது என் எழுத்து நடையே அல்ல....இந்த கட்டுரைக்கு நான் ஒரு தொகுப்பாளர் மட்டுமே....

Post Comment

இதையும் படிக்கலாமே:


12 கருத்துகள்:

  1. அரிய தகவல்!தந்ததற்கு மிக்க நன்றி! தொடர்ந்து எழுதுங்க.படிக்க காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. பல வரலாற்று தகவல்களை தருகிறீர்கள். வாழ்த்துக்கள். இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. இப்படியும் நடந்துள்ளதா அறியாத தகவல்கள்

    பதிலளிநீக்கு
  4. தேசிய அரசியலை கரைத்து குடித்திருக்கிரீர்களோ?

    பதிலளிநீக்கு
  5. இந்த தலைமுறைக்கு இது அறிய தகவல்கள்......நன்றி.....

    பதிலளிநீக்கு
  6. தகவல்கள் வியப்பளிகிறது . அடுத்த பதிவை படிக்க ஆவலாக உள்ளேன்

    பதிலளிநீக்கு
  7. பல தகவல்கள்..நல்ல பதிவு நண்பா..தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
  8. [MA]ஆமினா, பாலா, NIS, சோழ பரம்பரை எம்.எல்.ஏ, NKS.ஹாஜா மைதீன், மணிவண்ணன், ஹரிஸ் ஆகியோரின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி/MA]

    பதிலளிநீக்கு
  9. நீங்கள் வயதில் முதியவர் போல... பழைய அரசியலைப் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்...

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா17 நவ., 2010, 3:52:00 PM

    realy wonderful article thanks and misa , how to implemented and advantages and disadvantges of misa also we need please write more detail

    பதிலளிநீக்கு
  11. ரசிக்கவும்.. சிந்திக்கவு்ம் வைக்கும் தகவல் மிக்க நன்றி... சகோதரா..

    பதிலளிநீக்கு
  12. மிகவும் அரிய தகவல்கள்.நன்றி.

    மேலும் உங்கள் பதிவின் படி ஜெயபிரகாஷ் நாராயணன் ராணுவத்தைக் கூட கலவரம் செய்ய தூண்டினார் என்பது நம்ப இயலாத ஒன்று மாதிரி தெரிந்தாலும் ஒரு வேளை அந்த தகவல் உண்மையென்றால் உள்நாட்டு கலவரம் என்பதை விட பாகிஸ்தான் இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் நல்ல தருணமாகவே அமைந்திருக்கும்.ஆனாலும் இந்திரா காந்தியின் காலம் காங்கிரஸ் பிளவு, அவசர கால சட்டம் தவறானதும் ஒரு விதத்தில் உள்நாட்டு கலவரத்தை அரசியல் மட்டத்தில் உருவாக்கியது என்பது மட்டுமே வரலாறு பதிந்த உண்மைகள்.கூடவே இந்திரா காந்தியின் ஆட்சிக்கால வங்கி அரசுடமை,பொற்கோயில் கலவரம்,பெங்களாதேஷ் உருவாக்கம்,போன்றவை மகுடம் தரிக்க கூடியவை.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.