என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், டிசம்பர் 26, 2011

11 எம்.ஜி.ஆர்., சாகல....இன்னும் உயிரோடுதான் இருக்கார்....- ஒரு ஃபிளாஷ்பேக்...




அப்போது எனக்கு பத்து வயசு இருக்கும். ஒரு நாள் காலை வழக்கம்போல் தண்ணீர் பிடிக்க குழாயடிக்கு போன என் அம்மாவோடு நானும் போயிருந்தேன். அங்கே ஒரே பரபரப்பு...
கூடியிருந்த பெண்களெல்லாம்
எம்.ஜி.ஆரு செத்துப்போயிட்டாராம்” என்று பேசிக்கொண்டு இருந்தனர்.

நீ வேற அவரு செத்துருக்கமாட்டாரு இது அந்த சூரிய கச்சி கருணாநிதியோட பொய்யா இருக்கும்” என்று ஜெயலலிதாவின் ஜெராக்ஸ் போலவே பேசினார் ஒரு பெண்மணி.

இன்னொரு பெண்ணோ...எம்.ஜி.ஆரெல்லாம் சாகற ஆளா?...அவரு சாகல...உயிரோடதான் இருக்காரு..ன்னு சொன்னார்.

”போடி போக்கத்தவளே....காலையில ரேடியாக்காரன் சொன்னான். பொய்யா சொல்லிருக்கப்போறான்”.
மெல்ல மெல்ல விஷயம் காட்டித்தீ போல பரவியது.
எனக்கும் எம்.ஜி.ஆரை தெரியும். எப்படி தெரியுமா எனக்கு எம்.ஜி.ஆர்., அறிமுகமானார்?

1984-ஆம் ஆண்டில் எங்கள் அறந்தாங்கி தொகுதியில் திருநாவுக்கரசு (இப்போது திருநாவுக்கரசர்) போட்டியிட்டபோது, எங்கள் ஊருக்கு திற்ந்தவெளி ஜீப்பில் பிரச்சாரத்துக்கு வந்தார். அதில் எம்.ஜி.ஆர்.,படம் ஒட்டியிருக்கும். எனக்கு அப்போது தெரியாது இவர்தான் எம்.ஜி.ஆர்.என்று. இருந்தாலும் திருநாவுக்கரசு  ஜீப்பிற்கு பின்னாடிப்போவேன். ஆங்காங்கே ஆராத்தி எடுக்கும் மக்களுக்கு ஒரு ஐந்து ரூபாய் சலவை தாளை கையில் திணிப்பார்கள். எனக்கும் அப்படி ஒரு ஐந்து ரூபாய் கிடைத்தது. ஒரு டீ முப்பது காசு விற்றகாலத்தில் ஐந்து ரூபாய் என்பது எவ்வவளவு பெரிய காசு..அந்த பணத்தை சிலவே செய்யாமல் பாட புத்தகத்தின் நடுவே மயிலிறகிற்கு பக்கத்தில் இதையும் வைத்து வைத்து பார்த்துக்கொண்டிருந்தேன். சரி.... விஷயத்திற்கு வருகிறேன்.

அந்த பிரச்சார ஜீப்பில் ஒட்டப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர்., படத்தை காட்டி இது யாரு என்று தெரியாமல் ஒருவரிடம் கேட்டு தொலைந்துவிட்டேன்.
உடனே அவரு கோபமாகி இவரைத்தெரியாதா?  இவருதான் எம்.ஜி.ஆரு.... நீ எல்லாம் என்னத்தை படிச்சியோ? என்றார்.
நான் என்னவோ அந்த ஏழு வயசில் கலக்டருக்கு படிச்சிட்டதா நினைச்சிருப்பார் போல...
அண்ணே இவரா எம்.ஜி.ஆரு?....படம்லாம் நடிப்பாரே அவரா இவரு?....என்ன இப்படி கண்ணாடி தொப்பிலாம் போட்டிருக்காரு?... படத்துல இப்படி இருக்கமாட்டாரே?....ன்னு கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தேன். (நிஜம்தான் எம்.ஜி.ஆர்., ஒரு ஹீரோவாக, மிகவும் அழகாக, தொப்பி கண்ணாடி இல்லாதவராகவே சினிமாவில் பார்த்திருந்ததால் எனக்கு அவரின் பிம்பம் அப்படித்தான் நினைவில் இருந்தது)

அடே...அது சினிமாவுலடா... இப்ப அவரு இப்படித்தான் இருப்பாரு...ன்னு சொன்னார் அந்த அண்ணன்.
இருந்தாலும் எனக்கு நம்பிக்கை வரவில்லை. அரசியல்வாதி எம்.ஜி.ஆர்.,வேறு....சினிமா நடிகர் எம்.ஜி.ஆர் வேறு என்றே நினைத்திருந்தேன். வீட்டிற்கு வந்ததும் என் சட்டை பையில் இருந்த தொப்பி,கண்ணாடி அணிந்த எம்.ஜி.ஆர்., படத்தை எடுத்து, வீட்டில் இருந்த ஏதோ ஒரு (படத்தில் பெயர் நினைவில் இல்லை) எம்.ஜி.ஆர்., பட போஸ்டரை .  (தினத்தந்தி கடைசி பக்கத்தில் வரும் ஸ்டாம்ப் சைஸ் பேப்பர் கட்டிங்க்) எடுத்து வைத்து ஒப்பிட்டு பார்த்தேன். லேசாக வித்தியாசம் தெரிந்தது. இருந்தாலும் திருப்தி இல்லை.

அரசியல்வாதி எம்.ஜி.ஆருக்கு என் பென்சிலை எடுத்து மீசை வைத்துப்பார்த்தேன். தொப்பியையும் கையை வைத்து மறைத்துவிட்டேன். லேசாக புலப்பட்டது...அந்த அண்ணன் சொன்னது சரிதான். அவருதான் இவரு...இவருதான் அவரு....என்ன கதை திசை திரும்பிருச்சோ?

சரி ஃபிளாஷ்பேக் முடிந்தது... இனி....எம்.ஜி.ஆர். மரணத்திற்கு போகலாம்...

எம்.ஜி.ஆரின் மறைவு செய்தி எல்லோருக்கும் எட்டியது. ரேடியோவை திறந்தால்... ஏதேதோ வாத்தியங்களை உருட்டி சோக கீதம் வாசித்தபடியே இருந்தார்கள். அப்போது இருந்த ஒரே சேனலான தூர்தர்சனிலும் இதேதான். எம்.ஜி.ஆர்., மரணத்தை நேரடியாக ஒளிபரப்பினார்கள்.



அப்போதெல்லாம் தெருவுக்கு இரண்டு சாலிடர், அல்லது டயனோரா டி.வி.தான் இருக்கும். தெளிவாக தெரிய ஒரு பூஸ்டரும் வைத்திருப்பார்கள். டி.வி.இருந்த வீடெல்லாம் ஒரே மக்கள் வெள்ளம். நானும் உட்கார்ந்து பார்த்தேன். எம்.ஜி.ஆரின் தலையருகே ஜெயலலிதா சோகமாக உட்கார்ந்திருந்தார். அப்போது எனக்கு தெரிந்ததெல்லாம் எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா, ராஜீவ்காந்தி, திருநாவுக்கரசு ஆகிய அரசியல் தலை(வர்)கள் தான். அதிலும் திருநாவுக்கரசு  எங்கள் தொகுதி எம்.எல்.ஏ,வாகவும் அமைச்சராகவும் இருந்தவர் என்பதால்தான் அவரையும் தெரியும்.



அவர்களில் அனைவரும் எம்.ஜி.ஆர்., மரணத்தின்போது வந்திருந்தார்கள். இடையிடையே ரஜினி, கமல், சிவாஜி என்று சினிமா பிரபலமும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். ஹையா..ரஜினி...ஹையா கமல் என்று என்னைப்போன்று சிறுவர்கள் மத்தியில் ஒரே ஆராவாரம். இந்த ஆராவாரம் யாரையோ எரிச்சல் அடைய செய்தது போல...என் தலையில் ஒரு குட்டு...யாரென்று பார்த்தால் யார் வீட்டில் டி.வி.,பார்த்துக்கொண்டிருக்கிறோமோ அந்த வீட்டின் உரிமையாளர்...
என்னடா சத்தம் போடுறே....எந்திரிச்சு போடா...என்னமோ இவனுக்கு அரசியல் தெரிஞ்சதுபோல பார்த்துக்கு இருக்கான் என்று சொல்லி இல்லை..இல்லை திட்டி வெளியே அனுப்பிவிட்டார். அவமானத்துடனும், ஆற்றாமையுடனும் வெளியே வந்தேன்.

அப்போது முடிவு செய்ததுதான்...அரசியலை தேடி தேடி படிக்க வேண்டும் என்று....அதன்பிறகு 1989 தேர்தலில் சுவற்றில் நோட்டீஸ் ஒட்டும் அளவிற்கு வளர்ந்தேன்.இதில் இன்னொரு காமெடி என்னவென்றால்...யாரால் எனக்கு அரசியல் தெரியாது என்று வெளியேற்றப்பட்டேனோ அவரே இப்போது சில அரசியல் சந்தேகங்களை என்னிடம்தான் கேட்கிறார். அய்யோ மறுபடியும் கதை திசை திரும்பிருச்சே....மறுபடியும் விஷயத்திற்கு வருகிறேன்.

டி.வி.,பார்க்கமுடியாமல் வெளியேறிய நான் அப்படியே கடைத்தெருவிற்கு வந்தேன். அங்கே ஒரு கரண்ட் கம்பத்தில் போட்டோவாக சாய்ந்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒரு பூ மாலையுடன். திரும்பவும் வீட்டிற்கு வந்தேன். மதியத்திற்கு மேல் மீண்டும் கடைத்தெருவிற்கு சென்றேன். ஒரு கூட்டம் கூடியிருந்தது. கூட்டத்தின் ஆரம்பத்தில் ஒருவர் எம்.ஜி.ஆர்.,படத்தை கையில் பிடித்தபடி நடந்துகொண்டிருந்தார். மொத்தக்கூட்டமும் அவர் பின்னால் சென்றது. எதற்கு இப்படி என்று புரியவில்லை எனக்கு...
கூட்டத்தில் வந்த ஒருவரிடம் கேட்டேன்
அண்ணே...எதுக்குண்ணே இப்படி போறீங்க?

இன்னைக்கு எம்.ஜி.ஆர்.,செத்துப்போயிட்டாருல்ல அதான் அமைதி ஊர்வலம் போறோம்...என்றார்.

இப்போது நான் தெளிந்திருந்தேன் நடிகர் எம்.ஜி.ஆரும், அரசியல்வாதி எம்.ஜி.ஆரும் ஒருவர்தான் என்று.....

இன்றே கடைசி....
-------------------------------------------------------


Post Comment

இதையும் படிக்கலாமே:


11 கருத்துகள்:

  1. அனுபவ பகிர்வு நன்று..அன்போடு அழைக்கிறேன்..அழுகை அழ ஆரம்பிக்கிறது

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் கசாலி,சார்!அருமையான நினைவு கூறல்.

    பதிலளிநீக்கு
  3. நிறையப் பேர் இளம் வயதில் நடிகர் எம்.ஜி.ஆர் வேறு, அரசியல்வாதி வேறு என்றுதான் நினைத்திருப்பார்கள் போல... என்னைப் போலதான் நீங்களும் என்பதில் ஒரு ஆறுதல் தம்பி...

    பதிலளிநீக்கு
  4. M.G.R patriya palaiya Ninavugalai kilari vittu vittirgal. Arumai Sago.!Tamilmanam 3.

    பதிலளிநீக்கு
  5. சிறந்த மனிதரைப் பற்றிய மிகச்சிறந்த நினைவுகள்!!!

    பதிலளிநீக்கு
  6. சகோ பகிர்வுக்கு நன்றி
    //இது அந்த சூரிய கச்சி கருணாநிதியோட பொய்யா இருக்கும்”//

    இப்புடித்தான் எங்க ஊருலையும் பேசுவாகே சூரிய கச்சி ரெட்ட எல கச்சி எங்க அம்மாவ பெத்தவுகளுக்கு வேறு ஒன்றும் தெரியாது.

    அதற்காகத்தான் ஜானகி அவர்களும் ஜெயலலிதாவும் அந்த ரெட்ட எல சின்னத்தை கைப்பற்ற அடித்துக் கொண்டார்கள்

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்,
    "அம்புலி 3D" திரைப்படத்தின் டீசர் ட்ரெய்லர் நேற்றுமுதல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது... இதோ உங்கள் பார்வைக்கு...

    www.youtube.com/watch?v=qC_Mf4cVZY8

    மேலும் விவரங்களுக்கு
    http://ambuli3d.blogspot.com

    நன்றி

    அன்புடன்
    "அம்புலி" படக்குழுவினர்

    பதிலளிநீக்கு
  8. (நிரூபன் பதிவில் உங்கள் கேள்விக்கான சுருக்கமான பதில்):வணக்கம்,கசாலி சார்!இத்தனை நாளும் இலங்கையில் நடந்தது என்ன?இலங்கை அரசுக்கு எதிராக எதற்காக ஆயுதப்போராட்டம்,அகிம்சை வழிப்போராட்டம் எல்லாம் நடந்தது என்று தெரியாமலே கிணற்றுத் தவளையாக(மன்னிக்கவும்),உலகறிந்த பதிவராக இருப்பது ஆச்சரியமே!உலகின் பல்வேறு நாடுகளிலும் சிறுபான்மையின மக்கள் போராடுவது ஏன் என்றாவது அறிந்திருக்கிறீர்களா?இந்தியா எப்படி உருவானது என்றாவது தெரியுமா?இஸ்ரேல் உருவானது எப்படியென்று தெரிந்திருக்கும்!வேறும் நாடுகளில் சட்ட திட்டங்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்றாவது அறிந்திருக்கிறீர்களா?இந்தியா சுதந்திரம் பெற்றபோது மொழிவாரி மாநிலங்கள் உருவாயிற்று!இலங்கையில் பிரிந்திருந்த மாநிலங்கள் பிரிட்டி சாரால் நிர்வாக வசதிக்காக ஒன்றாக்கப்பட்டது தெரியுமா,சார்?பின்னர் சுதந்திரத்தின் போது அப்படியே பெரும்பான்மை இனத்தவரிடம் கையளிக்கப்பட்டது என்பது வரலாறு,சார்!அதனால்,பிரிவினைக்கு எதிராக 1948-க்குப் பின் நாற்பத்தெட்டுத் தடவைகள் யோசித்து,யோசித்து எப்படி,எப்படியெல்லாம் சிறுபான்மையினத்தவரை ஒடுக்கலாம் என்று தீட்டிய(எழுதிய)சட்டங்களுக்கு எதிராகப் போராடியே புலம்பெயர்ந்தோம்!ஆயுதம் தூக்கினோம்!இன்றும் எங்கள் பிரதேசத்தை எங்களிடம் ஒப்படைக்குமாறு கோரியே அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கிறோம்!முட்டுக்கட்டையாக இருப்பது இந்தியாவே!!!

    பதிலளிநீக்கு
  9. நல்ல மனிதரைப் பற்றி நல்ல பதிவு! இன்னும் என்னைப் போல நிறைய மனிதர்களின் மனதில் வாழ்கிறார்!
    தங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
    அன்புடன் அழைக்கிறேன் :
    "மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?"

    பதிலளிநீக்கு
  10. நான் ரொம்பே லேட் பன்னிட்டேன் நீங்கள் இந்த பதிவு எழுதும்போது பதிவுலகில் நான் இல்லை அப்படியே பதிவுக்கு வந்த நான் பதிவு எழுத தெரியாம காப்பி பேஸ்ட் பன்னிட்டு இருந்தேன். மணம்கணத்தது இந்த பதிவு. ஏன்னா எனக்கு பேர்வைத்தது எம்.ஜி.ஆர் அட நெசமாதாங்க அப்போ நான் சின்ன புள்ள இல்ல இதுவும் அரசியல் என்பது போகபோக புரிந்தது. ஹி ஹி ஹி.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.