என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், நவம்பர் 16, 2011

13 எம்.ஜி.ஆருக்கு திருப்புமுனை தந்த திண்டுக்கல்.......


முந்தைய பாகங்கள் 1, 2, 3



எம்.ஜி.ஆர்., தன் பலத்தை நிரூபிக்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல் இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தது. தி.மு.க.,எம்.பி.,ராஜாங்கத்தின் மரணத்தை தொடர்ந்து அங்கு 1973 மே 20-ஆம் தேதி இடைத்தேர்தலை நடத்த முடிவு செய்தது தேர்தல் ஆனையம். அந்த செய்திதான் எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது. ஆனால், இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி சிந்திக்கவில்லை எம்.ஜி.ஆர்.,

இப்போதுதான் கட்சி ஆரம்பித்திருக்கிறோம். இந்த நேரத்தில் தி.மு.க.,வோடு மோதி தோற்றுவிட்டால், நம் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகிடுவிடும் என்று பலத்த யோசனையில் இருந்தார் அவர். ஆனாலும், விடவில்லை மற்றவர்கள். நம் கட்சி போட்டியிட்டே ஆகவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். ஒருவழியாக போட்டியிட சம்மதித்தார் எம்.ஜி.ஆர்.,

அண்ணா.தி.மு.க.,வின் முதல் வேட்பாளர் தேர்வு தீவிரமாக தொடங்கியது. வேட்பாளராக சேடப்பட்டி முத்தையாவை சிபாரிசு செய்தார் கட்சியில் கொள்கைபரப்பு செயளாலர் எஸ்.டி.சோமசுந்தரம். ஆனால், அப்போதைய உசிலம்பட்டி பார்வார்டு பிளாக் எம்.எல்.ஏ.,கந்தசாமியின் தம்பியான வக்கீல் மாயத்தேவரை சிபாரிசு செய்தார் ஆர்.எம்.வீரப்பன். இறுதியில் ஆர்.எம்.வீ.,சிபாரிசு செய்த மாயத்தேவரே வேட்பாளராக தேர்வானார்.

எதிர்முகாமில், தி.மு.க.,சார்பில் பொன்.முத்துராமலிங்கமும், காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் என்.எஸ்.வி.சித்தனும், இந்திரா காங்கிரஸ் சார்பில் சீமைச்சாமியும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வேட்பாளராக சங்கரய்யாவை அறிவித்தார் அந்த கட்சியின் தலைவர் பி.ராமமூர்த்தி. பி.ராமமூர்த்தியை எம்.ஜி.ஆர்.,சந்தித்து பேசியதை தொடர்ந்து சங்கரய்யாவை போட்டியிலிருந்து விலகசொன்னதோடு மட்டுமல்லாமல், அண்ணா.தி.மு.க.,விற்கு ஆதரவும் அளித்தது மார்க்சிஸ்ட் கம்யூணிஸ்ட். அதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் எம்.ஜி.ஆரை ஆதரித்தது. இரு கம்யூனிஸ்ட்களின் கூட்டணியோடும் உற்சாகமாக பிரச்சாரம் செய்தார் எம்.ஜி.ஆர்.

இதற்கிடையில் தேர்தலுக்கு பத்து நாள் முன்னதாக ஆளுங்கட்சியான தி.மு.க.,வின் பலத்த நெருக்கடிகளுக்கு மத்தியில் தன் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வெளியிட்டார் எம்.ஜி.ஆர். வெளியிட்ட இடங்களிலெல்லாம் திருவிழாப்போல மக்கள் கூட்டம் அலை மோதியது. படம் அபாரமான வெற்றி. இந்த வெற்றியை தேர்தலின் வெற்றிக்கான அச்சாரமாக நினைத்து உற்சாகம் அடைந்தனர் அ.தி.மு.க.,வினர்.


ஒரு பக்கம் கலைஞரும், மறுபக்கம் எம்.ஜி.ஆரும்., இரவு,பகல் பாராது அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க.வை வெற்றிபெறச்செய்யுங்கள் என்று பெரியாரும் அறிக்கை விட்டார்.
இந்த தேர்தலின் போதுதான் உங்கள் ஓட்டு தமிழனுக்கா? மலையாளிக்கா என்று எம்.ஜி.ஆர்.,மீது மலையாளி என்ற அஸ்திரத்தை முதன்முதலில் வீசினர் தி.மு.க.,வினர்.

தேர்தல் நாள் நெருங்க நெருங்க திண்டுக்கலில் பதட்டமான சூழலே நிலவியது. திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் அ.தி.மு.க-தி.மு.க.,வினரிடையே பயங்கர கலவரமும் மூண்டது. கலவரத்தை அடக்க போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். சுமார் 100 பேர்களை கைது செய்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தேர்தல் நடந்தது. மக்கள் அதிக அளவில் வாக்களித்தனர். மொத்தமுள்ள 6,43,000 வாக்குகளில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாயின. வாக்குகள் எண்ணப்பட்டது.
அண்ணா.தி.மு.க.,வேட்பாளர் மாயத்தேவர் 2,60,930 வாக்குகள் பெற்று அபாரமான வெற்றியை பெற்றார்.
அவருக்கு அடுத்த படியாக காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் சித்தன் 1,19,032 வாக்குகள் பெற்றிருந்தார்.
தி.மு.க.,வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கமோ 93,496 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தார்.
இந்திரா காங்கிரஸ் வேட்பாளர் சீமைச்சாமி வெறும் 11,423 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.

ஆக,தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தன் தாய் கழகமான தி.மு.க.,வை மூன்றாம் இடத்திற்கு தள்ளி அபார வெற்றி பெற்றது அண்ணா.தி.மு.க.,

இடைத்தேர்தல் தந்த வெற்றியால முன்பை விட தீவிரமாக தி.மு.க,வை எதிர்க்க ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர்.,
அடுத்ததாக வந்தது பாண்டிச்சேரி பொதுத்தேர்தல். இந்த தேர்தலிலும் அண்ணா.மு.க.,வே வெற்றி பெற்றது.
மொத்தமுள்ள 30 தொகுதிகளில்
அண்ணா.தி.மு.க= 12,
இந்திரா காங்கிரஸ்= 7,
காமராஜர் காங்கிரஸ்= 5,
தி.மு.க= 2,
இந்திய கம்யூனிஸ்ட்= 2,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்= 1,
சுயேட்சை= 1
என்று முடிவுகள் வந்தது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட்டின் 2 எம்.எல்.ஏ.,க்கள், மார்க்சிஸ்ட்டின் 1 எம்.எல்.ஏ,. உதவியுடன் அண்ணா.தி.மு.க.,அங்கு ஆட்சியமைத்தது. அண்ணா.தி.மு.க.,வின் வேட்பாளர் எஸ்.ராமசாமி அங்கு முதல்வரானார். ஆட்சியமைத்தாலும் மெஜாரிட்டியை நிரூபிக்க இயலவில்லை. மெஜாரிட்டிக்கு தேவை 16 இடங்கள். ஆனால், அண்ணா.தி.மு.க.,விற்கு 15 இடங்களே இருந்தது. மெஜாரிட்டிக்கு தேவையான ஒரு இடம் குறைந்ததால் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க அக்கட்சிக்கு சிக்கல் எழுந்தது. இந்நிலையில் இந்திரா காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை கேட்டு இந்திராகாந்தியை நாடினார் எம்.ஜி.ஆர்., ஆதரவு தருவதாக சொன்ன இந்திரா ஒரு நிபந்தனை விதித்தார்....

இன்னும் வ(ள)ரும்


Post Comment

இதையும் படிக்கலாமே:


13 கருத்துகள்:

  1. அப்பாவுக்கு எம்.ஜி.ஆரை பிடிக்கும். அவர் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். அதனால் எனக்கும் பிடிக்கும்.எனக்குப் பிடித்ததால் என் பிள்ளைக்கும் பிடிக்கும். பகிர்வுக்கு நன்றி..!!!
    எனது வலையில் கூட எம்.ஜி.ஆர். பதிவு இருக்கிறது..!!
    எனக்கு எம்.ஜி.ஆரைப் பிடிக்கும்.. உங்களுக்கு?

    நேரமிருக்கும்போது வந்து பாருங்கள் என அன்புடன் அழைக்கிறேன். நன்றி..!!

    பதிலளிநீக்கு
  2. பதிவுகள் ஒவ்வொன்றும் சிறப்பாக அமைந்திருக்கிறது.. வாழ்த்துக்கள்!! ரஹீம் கஸாலி அவர்களே..!!!

    பதிலளிநீக்கு
  3. எனது வலையில்
    உங்கள் internet speed உடனடியாக தெரிந்துகொள்ள

    நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

    பதிலளிநீக்கு
  4. வரலாறு தெரிந்து கொள்ள "கொள்ள" ஆசை அப்புறம் என்னாச்சி பொறுமை இல்லை சாமி

    பதிலளிநீக்கு
  5. பல தெரியாத தகவல்கள்..


    நன்றி தலைவரே..

    பதிலளிநீக்கு
  6. நான் உங்களிடம் கேட்ட கேள்வியை உங்கள் பதிவிலேயே தெரிந்து கொள்ளலாம் போலிருக்கே... முதல் முறையாக இந்த தொடரை படிக்கிறேன்... தொடர்ந்தும் படிப்பேன்

    பதிலளிநீக்கு
  7. அனைத்தும் புதிய விஷயம் நன்றி

    பதிலளிநீக்கு
  8. இது தெரியாத வரலாறாக இருக்கிறது.

    //இந்த தேர்தலின் போதுதான் உங்கள் ஓட்டு தமிழனுக்கா? மலையாளிக்கா என்று எம்.ஜி.ஆர்.,மீது மலையாளி என்ற அஸ்திரத்தை முதன்முதலில் வீசினர் தி.மு.க.,வினர்.



    ஜெயிக்க வேண்டுமானால் கலைஞர் இதுவும் சொல்வார் இதுக்கு மேலும் சொல்வார்.

    பதிலளிநீக்கு
  9. இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராகப் போட்டியிட்டு ஜெயிக்கிறார் என்றால் எவ்வளவு செல்வாக்கு இருந்திருக்க வேண்டும்..

    அருமை..தொடர்ந்து சொல்லுங்கள்..

    பதிலளிநீக்கு
  10. சார் அருமையான பதிவு எங்கே படிச்சிங்க

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.