"மணி இங்கவா நீ இந்த கத்திய பிடி, ராஜ் நீ இந்த அருவாவ எடுத்துக்கோ, கண்ணா நீ எதுக்கும் இந்த பிஸ்ட்டல வச்சுக்கோ. இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்ட ஆரம்பிச்சுடும். பஸ்சும் வந்துடும். அதிலேர்ந்து நம்ம பரம எதிரி நளினி வந்து இறங்குவா. அவ பின்னாடியே போறீங்க. அவ அந்த தென்னந்தோப்பை தாண்டித்தான் வீட்டுக்கு போவா. அங்கே வச்சு காரியத்தை முடிச்சுடறீங்க. கண்ணா நீ போயி முதல்ல அந்த தென்னந்தோப்புக்குள்ள ஒளிஞ்சுக்க. ராஜ் நீதான் அவள துரத்திக்கு போயி வெட்டணும். உன்கிட்டேர்ந்து அவ மிஸ் ஆகிட்டான்னா மணி அந்த கத்திய நேர அவ கழுத்தை குறி பார்த்து வீசுறே. அதிலும் அவ தப்பிச்சுட்டான்னா கடைசியாத்தான் கண்ணா நீ சுடணும். ஆனா உன் துப்பாக்கிக்கு வேலையிருக்காதுன்னு நினைக்கிறேன். நீ சைலன்சரை மாட்டியே வச்சுக்கோ. அப்பதான் துப்பாக்கி வெடிக்கற சத்தம் கேக்காது. எந்த தடையமும் விட்டுறக்கூடாது. சப்போஸ் யாராவது இதுல போலீஸ்ல மாட்டினாக்கூட என் பேரு வெளிய வரக்கூடாது சொல்லிட்டேன். என்ன சரியா? காரியத்தை முடிச்சதும் நீங்க யாரும் என்னை பார்க்க வரவேணாம். போனும் போடக்கூடாது. உங்களுக்கு சேரவேண்டிய பணம் உங்க அக்கவுண்டுல விழுந்துடும். ஓகே. நான் கிளம்பறேன். ஜாக்கிரதை." - கிஷோர் காரில் கிளம்பினான்.
”ஏப்பா....எனக்கொரு சந்தேகம்?..... நளினியை கொலை பன்ற அளவுக்கு நம்ம பாசுக்கு என்ன மோட்டிவ்?” மணியிடம் கேட்டான் ராஜ்
“இங்கே பாரு..... நாமெல்லாம் கூலிக்கு வேலை பார்க்கறவங்க....சொன்ன வேலைய மட்டும்தான் செய்யனும் எதிர் கேள்விலாம் கேக்ககூடாது”
“இல்லை....சும்மா தெரிஞ்சுக்கலாம்ன்னுதான்”
“அதான் சொல்லிட்டேன்ல....” என்று கோபமானான் மணி....அப்போது அவனை இடைமறித்தான் கண்ணா...
“கோபப்படாதே மணி...ஏதோ தெரிஞ்சுக்க ஆசைப்படறான் சின்னப்பய...சொல்லிடுவோம்....ஏப்பா...ராஜ்...இப்ப எதுக்கு அந்த நளினிய போட்டுத்தள்ள சொல்லி கிஷோர் சார் சொன்னாருன்னு உனக்கு தெரியனும் அவ்வளவுதானே....சொல்றேன்.... மூனு மாசத்துக்கு முன்னாடி வரை கிஷோர் சாருட்ட வேலை பார்த்தவள்தான் இந்த நளினி. ஒரு சின்ன பிரச்னையால் இங்கேருந்து விலகி கிஷோர் சாரோட எதிரி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த்ட்டாள். கிஷோர் சாரோட கம்பெனி விஷயங்களெல்லாம் அவளுக்கு அத்துப்படிங்கறதால, சாருக்கு கிடைக்க வேண்டிய அத்தனை கான்ட்ரக்டையும் இவள் தன் திறமையால் எதிர் கம்பெனிக்கு கொண்டு போய்விட்டாள். இவளை இப்படியே விட்டால் தன் கம்பெனியை இழுத்து மூட வேண்டியதுதான் என்று நினைத்த நம்ம சார் அவளை போட்டுத்தள்ள முடிவு பன்னிட்டாரு....போதுமா...இப்ப தெரிஞ்சுருச்சா?”
அவர்கள் நளினிக்காக காத்திருந்தார்கள்.பஸ் வரும் சப்தம் கேட்டதும் பரபரப்பானார்கள்.
பஸ் நின்றது. ஆனால் பஸ்சிலிருந்து நளினி இறங்கவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"டே பஸ்சுல அவ வரலையே இப்ப என்னடா பண்றது?"
"எனக்கென்ன தெரியும் பாஸுக்கு போன் போடு"
மணி கிஷோருக்கு போன் செய்தான்.
"பாஸ் நான் மணி பேசறேன்."
"முட்டாள், இப்பதான் சொல்லிட்டு வந்தேன், எனக்கு போன் போடாதீங்கன்னு. அதுக்குள்ளே மறந்து போச்சா?"
"அதில்லே பாஸ். நளினி அந்த பஸ்சுல வரல."
"என்ன சொல்லறே? நல்லா பார்த்தீங்களா?"
"நல்ல பார்த்துட்டோம் பாஸ். அவ இந்த பஸ்சுல வரல. வேணும்னா ராஜ்கிட்ட கேட்டுப்பாருங்க."
"அதான் நீ சொல்லிட்டியே? அவன்ட்ட வேற தனியா கேட்க்கணுமா?"
"இப்ப என்ன பண்றது பாஸ்?"
"ஏதாவது வேலையா இருந்திருக்கும். அதான் அவ இந்த பஸ்ல வரலேன்னு நினைக்கிறேன். சரி அடுத்த பஸ் எப்பன்னு விசாரி"
"யார்ட்ட பாஸ் விசாரிக்கிறது?"
" ஆங்... போக்குவரத்து அமைச்சர்க்கு போன் போட்டு கேளேன். யார்டா நீ சரியான கேனயனா இருக்கே. அங்கே இருக்கிற பெட்டிக்கடையில விசாரிடா முட்டாள்.
அய்யய்யோ... அங்கே விசாரிக்க வேணாம். அது எங்கப்பன் குதிருக்குல இல்லைங்கற கதையாகிடும். எப்படியும் அடுத்த பஸ் இன்னும் அரைமணி நேரத்துல வந்துடும். அதுவரைக்கும் வெய்ட் பண்ணுங்க."
"ஓகே பாஸ்"
அரைமணி நேரம் கழிந்தது. அடுத்த பஸ் வந்தது. அதிலிருந்து நளினி இறங்கினாள்.
இன்னும் இருட்டாக இருந்தது. தென்னந்தோப்பு வழியாக நடக்க ஆரம்பித்தாள். சிறிது இடைவெளிவிட்டு அவர்களும் அவளை பின் தொடர்ந்தார்கள். இவர்களின் காலடி சப்தம் கேட்டு திரும்பி பார்த்தவள் அதிர்ந்தாள். ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்று
நினைத்துக்கொண்டு ஓடலானாள். அவர்களும் விடாமல் அவளை துரத்திப்போய் மறித்தார்கள். ராஜ் அரிவாளை ஓங்கியவாறு அவளின் கழுத்தை நோக்கி இறக்கினான்.
நளின் ”ஆஆஆ” என்ற அலறலுடன் சரிந்தாள்.
டப்பிங் தியேட்டர் ஸ்க்ரீனில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த அந்தக் காட்சி அத்துடன் நிறுத்தப்பட்டது.
நளினிக்காக டாப்பிங் பேசிய அந்த ஆர்ட்டிஸ்டை அழைத்தார் இயக்குனர் ஹரீஷ்....
“என்னம்மா....கத்தறே....ஆஆஆன்னு என்னவோ ஊசி போடுற மாதிரி.... அருவாள கழுத்தில இறக்கும்போது இப்படியா கத்துவாங்க....உயிர் பயத்துல அடி வயிற்றிலிருந்து சத்தம் வரனும். இன்னொரு தடவை நல்லா அலறும்மா....” என்றபடி மீண்டும் அந்த காட்சிக்கு டப்பிங் பேச அவளை அனுப்பினார் இயக்குனர்.
Tweet |
அடடே... க்ரைம் சுவையோட இந்தக் கதை நல்லா வந்திருக்கு தம்பி. இன்னும் நிறைய நீங்க எழுதணும்னு மகிழ்ச்சியோட வாழ்த்தறேன்.
பதிலளிநீக்கும்...ம்!
பதிலளிநீக்குகதை சுவாரசியமாக உள்ளது. முடிவுதான் கொஞ்சம் செயற்கையாக உள்ளது.
பதிலளிநீக்குட்விஸ்ட் அருமை .. ஆனால் என்னோமோ ஏதோ மிஸ்ஸிங்
பதிலளிநீக்கு